Friday 13 March, 2015

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (34) பறவைகளும் தற்கொலையும்

இந்தியாவின் அஸ்ஸாம் மானிலத்தின் வடக்கு கச்சார் மலைப் பகுதியில் உள்ள ஒரு கிராமம் ஜடிங்கா.  இக்கிராம வாசிகள் மழை நாட்கள் முடிந்து, மூடு பனி நிறைந்துள்ள சந்திரன் இல்லாத இரவில் (ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில்) விளக்குகளை வெளியில் ஏற்றி வைக்கின்றனர். அல்லது பந்தங்கள் ஏற்றி வைக்கின்றனர்.  இந்த வெளிச்சத்தைப் பார்த்து நூற்றுக் கணக்கில் பறவைகள் அங்கு வந்து கூடுகின்றன. 

பறவைகள் அப்படி வரும்போது, மது அருந்திய மனிதன் போலத் தடுமாறி, மரக்கிளைகளில் அடிபட்டுக் கீழே விழுகின்றன.  கிராம வாசிகள் அப்படி அடி பட்டு விழாத பறவைகளைத் தடி அல்லது உண்டிவில் கொண்டு அடித்து வீழ்த்துகின்றனர்.  இந்த நிகழ்ச்சியை சிலர் பறவைகள் தற்கொலை செய்து கொள்ள அங்கு வருகின்றன என்று சொல்வார்கள்.

வெகு காலம் வரை இது புரியாத புதிராக இருந்தது.  ஏன் இன்றும் கூடத்தான். 

பறவை நிபுணர்கள் டாக்டர் சாலிம் அலி, திரு சென்குப்தா போன்றவர்கள் இந்த நிகழ்ச்சி குறித்து ஆராய்ச்சிகள் நடத்தினர்.  அந்த ஆராய்ச்சிகளின் பலனாகக் கீழ்க் கண்ட விஷயங்கள் தெரிய வந்தன.
ஜடிங்காவுக்கு சுமார் 44 வகையான பறவைகள் வருகின்றன.  அவற்றுள் கரு மூக்கி அல்லது வெள்ளைக் கொக்கு, நொள்ள மடையான் அல்லது குருட்டுக் கொக்கு, தாழைக் கொக்கு, கருங்கொக்கு, மீன் கொத்திகள் அடக்கம்.  அவை அஸ்ஸாமில் எல்லா இடத்திற்கும் இப்படி வருவதில்லை.  சுமார் 200 மீடர் அகலமும், 1500 மீடர் நீளமும் உள்ள ஒரு பகுதிக்கு மட்டுமே வருகின்றன.  அப்படி வரும் பறவைகள் எல்லாம் அங்கேயே வாழ்ந்திடும் பறவைகள் அல்ல.  அவை எல்லாம் வலசை போகும் பறவைகள் (Migratory birds).  ஆனால் அப்பறவைகள் வெளி நாடுகளில் இருந்து வலசை வந்திடும் பறவைகள் அல்ல.  உள் நாட்டிலேயே புலம் பெயரும் பறவைகளே (Local migrants).

மீன் கொத்தி(White breasted king fisher) படம் இணைய தளத்தில் இருந்து

குருட்டுக் கொக்கு (Pond heron) – படம் சுதீர் ஷிவ்ராம்


கரு மூக்கி அல்லது வெள்ளைக் கொக்கு (Little egret)
படம் இணைய தளத்தில் இருந்து

அப் பறவைகள் தற்கொலை செய்து கொள்வதற்காக அங்கு வருபவை அல்ல.  மழை நின்று மூடு பனி சூழ்ந்த நிலையில் நிலவற்ற இரவில் அவை விளக்கு வெளிச்சத்தினை நோக்கிப் பறக்கின்றன.  ஆனால் இதில் என்ன ஒரு அதிசயம் என்றால் உலகின் பல பகுதிகளில் இதே வானிலைச் சூழலும், விளக்குகளும் இருந்தாலும் ஜடிங்காவுக்கு மட்டுமே இப்படிப் பறவைகள் வருவது தான்.

சில விஞ்ஞானிகள் அந்தப் பகுதியில் புவியின் காந்த சக்தியில் மாற்றம் ஏற்பட்டு பறவைகளைக் குழம்பச் செய்திடுகிறதோ என்று நினைக்கின்றனர்.

எப்படியானால் என்ன?  பாவம் அந்தப் பறவைகள்.  அங்கு வந்து உயிரிழக்கின்றன.  விளக்குகளும் பந்தங்களும், நிலவற்ற மூடு பனி சூழ்ந்த இரவில், அங்கு ஏற்றி வைக்கப் பட்டிராவிட்டால் அந்தப் பறவைகள் அங்கு வந்திருக்குமா?  தங்கள் உயிரைத் தான் விட்டிருக்குமா?

 08-04-2011                                            நடராஜன் கல்பட்டு




No comments:

Post a Comment