Friday 18 October, 2013

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (32) அழகே யமனாய்

சில விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் அவற்றின் அழகான உடல் உறுப்புகளே யமனாகி விடுகின்றன.  அவற்றில் சில வற்றைப் பார்ப்போமா?
மனித வர்க்கத்தின் செயல்களால் இந்த உலகில் இருந்து பல விலங்குகளும் பறவைகளும் மறைந்து விட்டன.  விவரம் தெரிந்து முற்றிலுமாக முதல் முதலாய் மறைந்த பறவை டோடோ என்னும் பறவை.
டோடோ


மொரீஷியஸ் தீவில் மனித நடமாட்டம் இன்றி இருந்த நாட்களில் மிக அதிக அளவில் வாழ்ந்த ஒரு பறவை இனம் இது.  சுமார் மூன்றடி உயரமும் 20 முதல் 25 கிலோ வரையான எடையும் கொண்ட இப் பறவை புறா இனத்தைச் சேர்ந்து.
இறக்கையென ஒரு உறுப்பு இருந்தும் பறக்க முடியாத பறவை இது.  ஒரு காலத்தில் இந்தப் பறவைக்கு எதிரிகள் யாரும் இருக்கவில்லை.  இதன் மாமிசம் உண்ண லாயக்கற்றதாக இருந்ததாம்.  ஆனாலும் மொரீஷியஸ் வழியே கப்பல்களில் சென்ற மாலுமிகள் அதன் சுருள் சுருளான சிறகுகளுக்காக அவற்றை ஒரு தடி கொண்டு அடித்துக் கொன்றனராம்.  தன்னை அடிக்க வருகிறானே என்று அந்தப் பறவையும் ஓடித் தப்பீக்காது.  அருகில் நின்றிருக்கும் மற்றப் பறவைகளும் ஓடித் தப்பிக்காமல் அசடுபோல் அங்கேயே நின்று கொண்டு வேடிக்கை பார்த்திருக்கும்.  அடுத்து அதன் உயிர் போகும் என்பது தெரியாது அதற்கு.
பின் நாட்களில் மக்கள் அத்தீவில் குடியேறிய போது அவர்களுடன் வந்த பூனை, நாய் போன்ற மிருகங்கள் எஞ்சி இருந்த டோடோக்களை முற்றிலுமாக அழித்தன.
யானை
யானையின் தந்தம் அதற்கு மிகவும் உபயோகமான ஒரு உறுப்பு.  மரப் பட்டைகளைக் கிழித்தெடுக்க, தன்னைத் தாக்க வந்திடும் புலி சிங்கம் போன்றவற்றோடு போராட என பலவிதத்திலும் அதற்கு உதவிடும் ஒன்று. 


அழகிய தந்தம் கொண்ட யானை – படம் சுதீர் ஷிவராம்

அதே தந்தம், சந்தனக் கட்டை போல, நுணுக்கமான வேலைப் பாடுகள் உடைய சிற்பக் கலைப் பொருட்களைத் தயார் செய்வதற்கு உபயோகப் படுத்த ஏற்றதாக உள்ளது.  தந்தத்தினை எடுப்பதற்காக யானையைக் கொல்கின்றனர்.  அதனால் யானையின் தந்தமே அதற்கு யமன் ஆகிறது.


தந்தச் சிற்பம் – சீனர்களின் கைத்திறன்

நம் நாட்டில் சட்டம் இருக்கிறது யானைகளைக் கொல்லக் கூடாது என்று.  இருந்தாலும் அவ்வப்போது நாம் பத்திரிகைகளில் படிக்கிறோம் கொல்லப் பட்ட யானைகளின் தந்தங்கள் அறுக்கப் பட்ட நிலையில் அவற்றின் சடலங்கங்கள் காடுகளில் தென்படுவதைப் பற்றி.  சட்டமிருந்து என்ன பயன்.  சட்டத்தை மதிப்பவர்கள் இருந்தால் தானே?
புலி
புலி ஒரு கம்பீரமான தோற்றம் கொண்ட விலங்கு.  அதன் மஞ்சளில் கருப்பு வரிகள் கொண்ட தோல் அதற்கு அழகு சேர்க்கிறது.


புலி – படம் ஹிந்து நாளிதழில் இருந்து

புலியின் தலையும் தோலும் சொகுசு மாளிகைகளில் தரை விரிப்பாயும், சில ஆன்மீக வாதிகளுக்கு ஆசனமாயும் மாறுகிறது.  அதன் கூரிய நகங்களோ சிலருக்கு கழுத்தில் ஆபரணமாய்த் தொங்குகிறது.



புலித் தோல் தரை விரிப்பாய் 


புலி நகங்கள் ஆபரணமாய்

மான்

மான் ஒரு அழகான பிராணி.  அது தன் கொம்புகளோடு நம்மை நிமிர்ந்து பார்த்திடும் அழகே தனி


ஆண் புள்ளி மான் – படம் சுதீர் ஷிவ்ராம்

கொம்புகளோடு அழகாய்த் தோன்றிடும் இதன் தலையை சுவற்றில் மாட்டித் தங்கள் வீட்டிற்கு அழகு சேர்ப்பதற்காகவும், தரையில் இதன் தோலை விரித்து அதன் மீதமர்வதற்காகவும் இந்த மான் கொல்லப் படுகிறது.


மான் தலை வீட்டின் சுவற்றை அலங்கரிக்க

பாம்பு

பாம்பின் தோல் பார்க்க மிக அழகான ஒன்று.


நல்ல பாம்பு



பவழப் பாம்பு

பாம்புகளின் தோலை உரித்துப் பதப் படுத்தி கைப் பைகள், இடுப்பிற்கு பெல்டுகள் என்று தயாரித்து விற்கின்றனர்.





பாம்புத் தோலால் ஆன பெண்கள் கைப் பையும் இடுப்பு பெல்டும்

பாம்புத் தோல் உலகளாவிய ஒரு பெரிய வியாபாரம்.  இதற்காக பல பாம்புகள் கொல்லப் படுகின்றன.
இந்தக் கொடுமைகளுக்குப் பறவைகளும் விதி விலக்கல்ல.

மயில்
மயில் ஒரு அழகான பறவை.  அது நம் நாட்டின் (இந்தியாவின்) தேசீயப் பறவை. 

மயில்
தேசீயப் பறவைதான்.  கொல்லக் கூடாது தான்.  ஆனாலும்…………………………
அதன் அழகிய தோகையே அதற்கு யமன்.  அழகிய “மயில் கண்கள்” கொண்ட அதன் தோகை சிறகுகளுக்காக மயில்கள் கொல்ல படுகின்றன.



மயிலின் தோகை இறகுகள்


நெருப்புக் கோழி
பறவைகளில் மிகப் பெரியது நெருப்புக் கோழி.  இறக்கைகள் இருந்தும் பறக்க முடியாத பறவை இது.


நெருப்புக் கோழி
நெருப்புக் கோழியின் வெண் சிறகுகள் மிகவும் மிருதுவானவை.  சற்றே நீண்டிருக்கும்.  இவற்றை மேல் நாட்டுப் பெண்கள் தங்கள் தலைகளில் அணிந்திடும் தொப்பிகளை அலங்கரிக்க உபயோகிக்கின்றனர்.


சீமாட்டியின் தலையில் உள்ள தொப்பியில் நெருப்புக் கோழியின் சிறகுகள்

இன் நாட்களில் நெருப்புக் கோழிகள் அதன் மாமிசத்திற்காகவும் மிருதுவான சிறகுகளுக்காகவும் பண்ணைகளில் வளர்க்கப் படுகின்றன.

பெரிய வெண் கொக்கு (Large egret)


பெரிய வெண் கொக்கு – படம் சுதீர் ஷிவராம்
பாலின் நிறம் கொண்ட வெண் கொக்கு பார்க்க மிக அழகான ஒரு பறவை.  ஓடு மீன் ஓட உரு மீன் வருமளவும் காத்திருக்க வேண்டுமா அல்லது ஒற்றைக் காலில் தவம் செய்திட வேண்டுமா?  இவற்றைச் செய்திட கொக்குக்கு இணை யாரும் இல்லை.
இனப் பெருக்கக் காலத்தில் இந்தக் கொக்கின் உடலில் புதிதாக நுண்ணிய நீண்ட சிறகுகள் முளைக்கும்.  இந்த நீண்ட சிறகுகளும், மற்றும் உடல் பூறாவும் உள்ள சிறகுகளும் மிக மிக மிருதுவானவை.  நீண்ட சிறகுகள் ஆடை அலங்காரப் பொருளாகவும், மிருதுவான மெத்தைகள் தயாரிப்பதற்கும் உபயோகப் படுத்தப் படுகின்றன.



வெண் கொக்கு சிறகு மெத்தை


இறகுகளால் சிகையலங்காரம்


தலைப்பாகையில் சிறகுகள்

இறைவன் தந்துள்ளான் பறவைகளுக்கும் விலகுகளுக்கும் அழகான மற்றும் அவற்றுக்குத் தேவையான உறுப்புகளை.  அவ்வுறுப்புகளே அவற்றுக்கு யமனாகி விடுகின்றன மனிதனின் பேராசையால்.

(கருப்பு வெள்ளை படம் க.ந.நடராஜன்.  மற்ற படங்கள் இணைய தளங்களில் இருந்து)
10-4-2011                                          நடராஜன் கல்பட்டு





Saturday 5 October, 2013

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (31)சில வினோதப் பறவைகள் -2- பல் குரல் விற்பன்னர் லயர் பேர்ட்

ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதிக் காடுகளில் காணப்படும் ஒரு வினோதப் பறவை லயர் பேர்ட் எனப்படும் பறவை.  லயர் என்றவுடன் ‘Liar’ பொய் சொல்பவர் என்று எண்ணி விடாதீர்கள். ‘Lyre’ என்பது ஒரு இசைக் கருவி.




இந்தப் பறவையின் தோகை போன்ற வால் சிறகுகள் லயர் என்ற இசைக் கருவியினைப் போல் இருப்பதால் இப் பறவைக்கு லயர் பேர்ட் என்ற பெயர் வந்தது.

இதன் தோகை பதினாறு இறகுகள் கொண்டது.  நடு இரண்டு இறகுகள் கம்பி போன்று நீண்டவை.  வெளி இரண்டு இறகுகளும் சிறிது அகலமானவை.  அவற்றின் நிறம் மிக அழகாக இருக்கும்.                                                 மற்ற பன்னிரண்டு இறகுகளும் நுண்ணிய பட்டு இழைகளால் ஆனது போன்று இருக்கும்.

லயர் பறவைகளில் இரு வகைகள் உண்டு.  ஒன்று மிக அழகான லயர் பறவை” (Superb Lyre bird).  மற்றொன்று ஆல்பர்ட் லயர் பறவை” (Albert Lyre bird) என்பது.  முன்னதின் ஆண் பறவை சுமார் 80 முதல் 98 சென்டிமீடர் வரை நீளமும் பெண் பறவை 74 முதல் 84 சென்டிமீடர் வரை நீளமும் இருக்கும்.  ஆல்பர்ட் (விக்டோரியா அரசியின் கணவர்) லயர் பறவை முன்னதை விட சற்றே சிறியது.





இனப் பெருக்க காலத்தில் ஆண் பறவை அடர்ந்த செடிகள் நடுவே மண்ணாலும் இலை சருகுகளாலும் ஒரு மேடை அமைத்து அதனடுவில் நின்று கொண்டு தன் இசைக் கச்சேரியை ஆரம்பிக்கும்.  கச்சேரி என்றால் என்ன மாதிரிக் கச்சேரி தெரியுமா?

சில நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பறவைகள் விலங்குகள் போலக் கத்தியும், பிரபல நடிகர்கள் போலப் பேசியும் நடித்தும் காண்பிப்பார்களே பல் குரல் விற்பன்னர்கள் அதைப் போன்று பல பறவைகளின் குரல்களையும் ஒலித்துக் காட்டும் இந்தப் பறவை.  அது மட்டும்தான் என்பதில்லை.  மனிதர்கள் எழுப்பும் எந்த ஒலியினையும் இசைத்துக் காட்டி நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்.  அது மரமறுக்கும் ரம்பத்தின் ஒலியோ, தானியங்கிக் கேமிராவின் ஒலியோ, காரின் அபாய அறிவிப்பு ஒலியோ, சொட்டு சொட்டாக குழாயில் இருந்து வாளியில் விழும் தண்ணீரின் ஒலியையோ இப்படி எந்த ஒலியானாலும் அதனால் இசைத்துக் காட்ட முடியும். இந்த விதத்தில் பார்த்தால் இது ஒரு பொய் சொல்லும் பறவையும் (Liar bird) தான்.

இப்படிப் பல குரல்களிலும் எழுப்பப் பட்ட இசையினில் மயங்கி ஒரு பெண் பறவை அரங்கை நெருங்கினால் ஆண் பறவை உடனே தன் முதுகின் மீது தோகை சிறகுகளை விரித்து வைத்துக் கொண்டு அவற்றைப் பட படவென அடித்தபடி இப்படியும் அப்படியுமாகச் சுற்றிச் சுற்றி நடனம் ஆடும்.  நடு நடுவே நமஸ்காரம் செய்வதுபோல உடலைத் தரையைத் தொடச் செய்யும். 

நீங்கள் லயர் பேர்டின் குரல் வளத்தினையும் நடனத்தின் நளினத்தினையும் பார்க்க வேண்டுமா? சொடுக்குங்கள் இங்கே:


அல்லது சுட்டியினைக் காப்பி செய்து கூகிள் ஸர்ச்சில் பேஸ்ட் செய்து enter button னை அழுத்தவும்.

இசையில் மயங்கிய பெண் பறவை, ஆணுடன் உறவாடி பின் அருகிலேயே தரையில் இருந்து அதிக உயரமற்ற இடத்தில் ஒரு கூடு கட்டி அதில் ஒரே ஒரு முட்டை இட்டு ஐம்பது நாட்கள் அடை காத்து குஞ்சு வெளிவந்த பின் அதற்கு இரை கொண்டு வந்து கொடுக்கும்.  ஆணிற்கோ குடும்பத்திற்காக உழைக்க வேண்டிய சிரமம் எதுவும் கிடையாது.

இப்போது சொல்லுங்கள் லயர் பேர்ட் பறவை ஒரு வினோதப் பறவைதானே?

இயற்கையில் எழிலில் தான் இறைவன் எத்தனை இன்பக் காட்சிகளை அளிக்கிறான்!

நடராஜன் கல்பட்டு





Monday 15 July, 2013


இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (31) சில வினோதப் பறவைகள் (2) பவர் பேர்ட் (Bower bird)

பறவைகள் ஒவ்வொன்றுமே கூர்ந்து கவனித்தால் வினோதம் ஆனவைதான்.  பின் ஏன் சில வினோதப் பறவைகள் என்று எழுத வேண்டும்?  காரணம் இருக்கிறது.  அவை நமது கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு வினோதமாக நடந்து கொள்கின்றன என்பதுதான் அந்தக் காரணம்.

ஆஸ்திரேலியாவிலும் ந்யூகினியிலும் காணப்படும் ஒரு பறவை பவர் பேர்ட் என்ற பறவை.

பவர் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு உள்ள பல பொருள்களில் ஒன்று நந்தவனங்களில் செடிகளாலோ, கொடிகளாலோ அமைக்கப் பட்டிருக்கும் அலங்கார வளைவு என்பதாகும்.


அலங்கார வளைவு (Bower)

பவர் பேர்ட் களில் சுமார் பதினெட்டு வகைகள் உள்ளனவாம். இந்தப் பறவைகளின் விசேஷம் என்ன வென்றால் அவற்றின் ஆண் பறவைகள் தன் துணையை ஈர்க்கத் தயாரிககும் அலங்கார வளைவும் அதன் தரைக்கு அழகு சேர்க்க அது சேர்க்கும் பொருட்களும்.

வருடத்தில் பெரும் பகுதி தனித்தே வாழும் ஆண் பறவைகள் இனப் பெருக்க காலம் வந்த உடன் காட்டில் தகுந்த ஒரிடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு நாணல் போன்ற குச்சிகளை சேகரித்து அலங்கார வளைவினைக் கட்டுகிறது. பின் நீலம் அல்லது பச்சை நிறப் பழச் சாற்றினை தன் எச்சிலோடு கலந்து மரப் பட்டைத் துண்டு ஒன்றினால் கட்டிய வளைவிற்கு சாயம் பூசுகிறது.

காதலியின் கவனம் ஈர்க்க வளைவு கட்டி விட்டால் மட்டும் போதுமா?  அங்கு அழகிய பொருட்கள் வேண்டாம்?  வண்ண வண்ண மலர்கள், சிப்பிகள், மனிதர்கள் குப்பையில் தூக்கி எறியும் வண்ண மிகு கண்ணாடித் துண்டுகள், பிளாஸ்டிக் மூடிகள் போன்றவற்றைக் கொண்டுவந்து வளைவிற்குள்ளும் அதனைச் சுற்றிலுமும் பரப்பி வைக்கிறது.


அலங்கார வளைவின் கட்டுமானப் பொருள் சேகரம்



வளைவும் மேடையும்   
கண்கவர் குப்பையை யார் சேர்க்கிறாரோ  அவரே என் கணவர் !!!
மேடையும் அலங்கார வளைவும் தயாரானபின் ஆண்பறவை தன் குரல் எழுப்பிப் பெண் பறவையை அழைக்கிறது.  பெண் வந்து அவற்றைப் பார்க்கும் போது ஆசையும் வெட்கமும் உடலில் கூட ஆண் பறவை பலவிதமான உடல் அசைவுகளைக் காட்டி (சாஷ்டாங்க நமஸ்காரம் உட்பட) பெண்ணைக் கவர முயற்சி செய்கிறது.  மனங்கள் இசைந்தால் மணம்.  பின் பெண் பறவை கூடு கட்டி முட்டை இட்டுக் குஞ்சு பொரிக்கிறது.

பவர் பேர்ட்களில் சேடின் பவர் பேர்ட் என்னும் பறவை நம் நாடில் உள்ள குயில் போன்ற வண்ணமும் தோற்றமும் கொண்டது. 




ஆண் பறவை மின்னும் பச்சை கலந்த கரு நீல வண்ணம் கொண்டது.  குயிலின் கண்கள் சிவப்பாக இருக்கும்.  ஆனால் பவர் பேர்டின் கரு விழியினைச் சுற்றி ஒரு நீலக் கோடு, கரு விழியிலே கரிய பாப்பாவைச் சுற்றி பச்சை கலந்த பழுப்பு நிறம் காணலாம்.  பெண் பறவை பெண் குயில போன்றே புள்ளிகள் கொண்ட பழுப்பு வண்ணத்தில் இருக்கும்.  பெண்ணின் விழிகள் நீல நிறத்தில் இருக்கும்.


 Female Satin Bowerbird

அழகுப் பொருட்களைச் சேர்ப்பதில் ஒவ்வொரு வகை பவர் பேர்டுக்கும் வித்தியாசம் உண்டு.

சேடின் பவர் பேர்ட் நீல நிறப்பொருட்களை சேர்க்கிறது. 

ரீஜென்ட் பவர் பேர்ட் என்னும் பறவை மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப் பொருட்களைச் சேர்க்கிறது.

கிரேட் பவர் பேர்ட் வெள்ளை நிறப் பொருட்களைச் சேர்க்கிறது.

கோல்டன் பவர் பேர்ட் வெள்ளை அல்லது மஞ்சள் நிற மலர்களால் தனது அலங்கார வளைவினை அழகுறச் செய்கிறது.


Golden Bowerbird male (top) and female

பவர் பேர்ட் ஒரு வினோதப் பறவைதானே?

இறைவன் எப்படியெல்லாம் நமக்குக் காட்சியளிக்கிறார்!


நடராஜன் கல்பட்டு