Saturday 14 March, 2015

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்  (25) ஸால்மன் மீன்கள்

“பறவைகள் மட்டும் தான் வலசை போகின்றனவா? என்றால், “இல்லை என்பார்கள் விஞானிகள்.  காரணம் சால்மன் என்ற ஒரு வகை மீனும் வலசை போகின்றன,  ஆனால் தன் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டுமே.

இயற்கையின் எழில் நமக்களிக்கும் பல விந்தைகளில் ஒன்று ஆங்கிலத்தில் ஸால்மன்’ (Salmon) என்றழைக்கப் படும் மீன்கள்.
சால்மன் மீன்                                                                       (http://en.wikipedia.org/wiki/Image:Oncorhynchus_keta.jpeg)


இந்த மீன்கள் வாழ்வது உப்பு நீர் கொண்ட அட்லாண்டிக் மற்றும் பசிபிக் சமுத்திரங்களில்.  ஆனால் இவை பிறப்பதோ வட அமெரிக்காவில் உள்ள கொலம்பியா நதியிலும் அதன் உப நதிகளிலும் மற்றும் அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகிய இடங்களில் உள்ள நதிகளிலும் ஆகும்.

மீன் குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளி வந்த பின் முழு வளர்ச்சி அடய சுமார் ஒன்று முதல் மூன்றாண்டுகள் எடுத்துக் கொள்கின்றன.   பின்னர் அவை கடலை நோக்கித் தன் பிரயாணத்தைத் தொடங்கும்.  அவ்வாறு பயணிக்கும் போது அவை சில காலம் சற்றே உப்பு நீராலான இடங்களில் (in brackish waters) வசிக்கும்.  அந்த நாட்களில் அவற்றின் உடலில் நல்ல தண்ணீரில் பிறந்த அவை உப்பு நீரில் வாழ்வதற்கான மாற்றங்கள் ஏற்படுகின்றன.  கடலை அடைந்த ஸால்மன் மீன்கள் சுமார் நன்கு ஐந்து ஆண்டுகள் பல ஆயிரம் மைல்கள் கடலில் சுற்றித் திரிகின்றன.

கடல் வாழ்க்கை முடிந்ததும் (அலுத்ததும்???) ஸால்மன் மீன் தான் பிறந்த இடத்திற்கே திரும்புகிறது.  திரும்பியதும் ஆற்றில் தனது வால் செதிள்களால் சிறு பள்ளம் தோண்டி பெண் மீன் அதில் சுமார் ஐயாயிரம் முட்டைகளை இடும்.  கூடவே நீந்திக் கொண்டு இருக்கும் ஆண் மீன் தனது விந்துக்களை அந்த முட்டைகளின் மீது தெளிக்கும்.  இது நடந்த பின் பெண் மீன் முட்டைகளை சிறு கற்களைக் கொண்டு மூடிவிடும்.  முட்டை இடும் வேலை நன்றே முடிந்த பின் சில நாட்களுள் தாயும் தந்தையும் இறந்து விடும்.

                                                      

பெரிது படுத்தப் பட்டுள்ள, ஸால்மன் மீன் முட்டைகள்
(http://en.wikipedia.org/wiki/Image:Salmoneggskils.jpg)

முட்டைகளிலிருந்து வெளி வரும் குஞ்சுகள் பிறந்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு முட்டைப் பைக்குள் மிச்சம் மீதம் இருக்கும் கருவினை உண்டு வாழும்.  அதன் பிறகு குஞ்சுகள் மெதுவாக சிறு சிறு நீர் வாழ் உயிரினங்களை உண்ண ஆரம்பிக்கும்.


                    முட்டையிலிருந்து வெளி வந்த மீன் குஞ்சு (பெரிதாக்கப் பட்ட படம்)
(http://en.wikipedia.org/wiki/Image:Salmonlarvakils.jpg)

ஸால்மன் மீன் பல ஆயிரம் முட்டைகளை இட்டாலும் அவற்றில் நூற்றுக்குத் தொண்ணூறு குஞ்சுகள் மீன் உண்ணும் கடல் வாழ் உயிர் இனங்களுக்கும், பறவைகளுக்கும், மனிதனுக்கும் இறையாகி விடுவதால் சுமர் பத்து சதவிகிதமே கடலைச் சென்று அடையும்.

முட்டை இடத் திரும்பும் மீன்கள் ஆற்று நீரின் வேகத்தினை எதிர்த்து, கடல் மட்டத்தில் இருந்து பல ஆயிரம் அடிகள் உயரத்திற்கு அந்த ஆறுகளில் ஒடும் நரில் நீந்தி தன் பிறந்த வீட்டினை அடைய வேண்டும்.

மனிதர்களின் மேம்பாட்டுக்காக ஆறுகளில் கட்டப்பட்ட அணைகள்
ஸால்மன் மீன்கள் எளிதாக நீந்தி தன் பிறந்த இடங்களுக்குப் போய்ச் சேர்வதில் தடங்கல் ஏற்படுத்தியதால் ஸால்மன் மீன்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.  மீன் பிடிப்பதை நம்பி வாழ்வோரின் வருமானமும் குறைய ஆரம்பித்தது.  முதல் முதலாக பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த சிலர் ஸால்மன் மீன்கள் அணைகளைத் தாண்டி தன் பிறந்த வீட்டிற்குச் செல்வதற்காக மரக் கட்டைகளைக் கட்டி படிகள் அமைத்து அதன் வழியே கொஞ்சம் நீரைச் செலுத்தி மீன்கள் ஏறிச் செல்வதற்காக மாற்றுப் பாதை அமைத்தனர்.

சமீப காலத்தில் ஸால்மன் மீன்கள் ஏறிச் செல்வதற்காக அணைகளின் பக்கத்தில் சிமெண்ட் கான்க்ரீட்டால் ஆன படிக் கட்டுகளையே (Fish ladder) அமைக்க ஆரம்பித்துள்ளனர்.  இது மட்டும் அல்ல.  சில இடங்களில் மின்சாரத்தினால் இயங்கும் மீன் தூக்கிகளையும் (Elevators) அமைத்துள்ளனர்.

இவ்வாறெல்லாம் ஸால்மன் மீன்கள் பிறந்த வீடு செல்ல வழி அமைத்துக் கொடுப்பது முற்றிலும் வியாபார நோக்கினால் மட்டுமே என்றாலும் அவை ஸால்மன் மீன்கள் இவ்வுலகில் இருந்து மறைந்து விடாமல் இருக்க உதவுகின்றன.  இதோ ஒரு மீன் ஏணியைப் பாருங்கள்.


அணைக்கட்டின் பக்கத்தில் மீன்கள் ஏறிச்செல்ல மீன் ஏணி
(http://en.wikipedia.org/wiki/Image:John_Day_Dam_fish_ladder.jpg)

நம் நாட்டில் அணைக்கட்டுகளிலும் மதகுகளிலும் மீன்கள் அதி வேகமாக விழும் நீரை எதிர்த்துத் துள்ளிக் குதிப்பதை நாம் பார்க்கிறோமே. அவையும் தன் பிறந்த வீடுகளுக்குச் செல்லத் துடிக்கும் பெற்றோர்கள் தானோ?

பிள்ளை பெறப் பிறந்த வீடு திரும்பும் ஸால்மன் மீன்கள் பல ஆயிரம் மைல்கள் கடலில் சென்று பின் பிறந்த வீடு திரும்ப தனது மோப்ப சக்தியை உபயோகிப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.  பல ஆறுகளிலிருந்தும் நீர் கடலில் கலக்கின்றதே, அப்போது வாசனையும் கலந்து விடாதா?  அப்படி இருக்க பிறந்த வீட்டு நீர் வாசனை மீன்களுக்கு எப்படித் தெரிகின்றது?

இயற்கையின் எழிலில்தான் எத்தனை வினோதங்கள் வழியே நீ எங்களுக்குக் காட்சி தருகின்றாய் இறைவா!

                                            நடராஜன் கல்பட்டு

                                       (படங்கள் விகிபீடியாவிலிருந்து)

No comments:

Post a Comment