Saturday, 27 April 2013


இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (29) செம்போத்துக் குருவி



(செம்போத்துக் குருவி – படம் விக்கிபீடியா தளத்தில் இருந்து)

செம்போத்துக் குருவி என்றொரு பறவை.  இது அண்டங் காக்காய் போன்று இருக்கும் உருவ அளவில்.  இதன் உடல் மின்னும் கருப்பு நிறத்திலும் இறக்கைகள் செம்பட்டை நிறத்திலும் இருக்கும்.  இதன் அலகுகள் காகத்தின் அலகுகளை விட சற்றே குட்டையாக வளைந்து இருக்கும்.  கண்கள் குயிலின் கண்களைப் போன்று, கரு விழியைச் சுற்றிலும் ஆரஞ்சு கலந்த சிவப்பு நிறத்தில் இருக்கும்.  இதன் வால் சிறகுகள் காகத்தின் வால் சிறகுகளையும் விட சற்று நீளமாகவும், தரையில் நடந்திடும் போது அவ்வப்போது தரையைத் தொட்டுக் கொண்டும் செல்லும்.

உருவத்தில் குயில் போலத் தோன்றினாலும், செம்போத்துக் குருவியின் குரல் சற்று வினோதமானது.  அது உரத்த குரலில் “பாங்க்….பாங்க்….பாங்க்” என்று கத்தும்.  அந்த ஒலி எண்ணை கண்டிடாத ராட்டிணம் எழுப்பும் ஒலி போன்றிருக்கும். 

செம்போத்துக் குருவி தரையில் சருகுகளுக்கடியில் கிடைக்கும் புழு பூச்சிகளையும், செடிகளின் விதைகளையும் உண்ணும்.  இப்படித் தன் உணவைத் தரையிலேயே தேடிக் கொள்வதால் இது அதிகமாக உயரத்தில் பறப்பதில்லை.

குயில் இனத்தை சேர்ந்தாலும் குயிலைப் போல் அல்லாது செம்போத்துக் குருவி கூடு கட்டி, முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து, குஞ்சுகளுக்கு இரை ஊட்டி வளர்த்திடும்.

செம்போத்துக் குருவி, பெரிய பந்து போன்று குச்சிகள், காய்ந்த புல், இலைச் சரகுகள் இவற்றால் கட்டப்பட்ட கூட்டினை அடர்ந்த புதர் போன்ற செடிகளுள் அமைத்திடும்.  கூட்டிற்குள் செல்லும் வழி வட்ட வடிவில் பக்க வாட்டில் அமைக்கப் படும்.  கூடு கட்டுதல், அடை காத்தல், இரை தேடி குஞ்சுகளுக்கு ஊட்டல் ஆகிய பணிகளில் ஆண் பெண் இரு குருவிகளுமே பங்கேற்கும். 

இயற்கையில் தான் எத்தனை காட்சிகள் நாம் பார்த்து ரசிக்க!



எங்கள் விட்டிற்கு சென்ற ஆண்டு தினமும் ஒரு விருந்தினர் வந்து கொண்டிருந்தார்.  தினமும் வருபவரை விருந்தினர் என்று எப்படி அழைக்கலாம் என்கிறிர்களா?  வருபவர் உங்களுக்குப் பிடித்தவராக இருந்து, அவர் வரவை ஆவலுடன் நீங்கள் எதிர் பார்ப்பதாக இருந்தால் அவரை விருந்தினர் என்று அழைப்பதில் தவறு ஒன்றும் இல்லையே.

வருகையை அறிவிக்க அவர் எங்கள் வீட்டுக் கதவைத் தட்டுவதோ அல்லது அதில் உள்ள அழைப்பு மணியை இயக்கிடும் ஸ்விட்சைத் தட்டுவதோ இல்லை.  பதிலாக உரக்கத் தன் குரலில், “போங்க்… போங்க்… போங்க்” என்று அழைப்பார் என்னை.  நானும் உடனே வாசல் கதவினைத் திறந்து கொண்டு அவர் தோட்டத்தில் தரையில் ஒய்யார நடை போட்டு அவ்வப்போது குனிந்து எதோ ஒரு பொருளைக் கொத்தித் தின்பதைப் பார்த்து ரசிப்பேன். 

அவர் உடல் நிறம் கறுப்புதான்.  அந்தக் கறுப்பு நிறத்திற்கும் அழகு சேர்த்திடும் அவரது மின்னும் கறும் பச்சை நிறக் கழுத்தும், செங்கற் சிவப்பு இறக்கைகளும், ரத்தச் சிவப்பு கண்களும்.

இந்தப் பறவையின் ஆங்கிலப் பெயர் க்ரோ ஃபெஸன்ட் (Crow pheasant) அல்லது க்ரேடர் கௌகால் (Greater Coucal) என்பதாகும்.  ஸென்ற்றோபஸ் சைனென்ஸிஸ் (Centropus sinensis) என்பது விஞ்ஞான ரீதியாய் இதற்கு அளிக்கப் பட்ட பெயர்.  தமிழில் இந்தப் பறவையினை செம்போத்துக் குருவி என்று அழைப்பார்கள்.

எங்கள் விட்டிற்குப் பக்கத்தில் ஒரு காலி மனை.  அதில் புல் பூண்டுகளும், செடிகளும், மரங்களும் ஒரு குட்டிக் காடு போல் வளர்ந்திருந்தன.  அதற்கு அடுத்த வீடு ஏழெட்டு வருஷங்களாகப் பூட்டி இருக்கும் ஒன்று.  அங்கும் காடென வளர்ந்திருந்தன மரம், செடி, கொடிகள்.

இந்த இரண்டு இடங்களில் தான் எங்கள் விருந்தினர் வசித்து வந்தார் தன் கணவரோடு.  ஆறு மாதங்களுக்கு முன்பு காடாய் வளர்ந்திருந்தவற்றை முனிசிபாலிடி காரர்களும் காலி வீட்டின் சொந்தக் காரர்களுமாக அகற்றினர்.  அத்துடன் செம்போத்து தம்பதியினருக்கு மறைவாய் வாழ்ந்திட இருந்த இடம் மறைந்தது.

செம்போத்து கூடு அமைப்பது வினோதமாக இருக்கும்.  சணல் கயிறு, துண்டுகள், வாழை நார், துணிக் கந்தல்கள், மெல்லிய குச்சிகள் இவற்றைக் கொண்டு ஒரு கால் பந்தளவிற்கு உருண்டையான கூட்டினை அமைக்கும்.

இப்படிப் பட்ட ஒரு வீட்டை எங்கள் வீட்டு எலுமிச்சை மரத்தில் அண்மையில் கட்டியது செம்போத்து.  ஆனால் பாவம்.  கட்டிய அந்த வீட்டில் வாழ்ந்து குழந்தை குட்டிகள் பெற்றிடக் கொடுப்பினை இல்லை அதற்கு.  காரணங்கள் இரண்டு.  ஒன்று அது விதவை.  அதன் கணவனை பறவை மாமிசம் உண்ணும் யாரோ சிலர் சென்ற ஆண்டு இறுதியில் கொன்று விட்டனர்.  சமீபத்தில் அவரையும் தான் தங்கள் உண்டி வில்லுக்கு இரையாக்கினர். 

இப்போது அந்தக் கூண்டு மட்டும் நிற்கிறது ஊமை சாட்சியாய் எங்கள் விருந்தினர் வாழ்ந்ததற்கு.


(படம் எடுத்தது நடராஜன் கல்பட்டு)

கொடுப்பினை எங்களுக்குந்தான் இல்லை விருந்திரை இனி தினமும் கண்டு களித்திட. :((


நடராஜன் கல்பட்டு

Monday, 15 April 2013




இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (28) முனியா

முனியா என்றதும் நான் யாரையோ கூப்பிடுவதாக நினைத்து விடாதீர்கள்.  ஆங்கிலத்தில் ‘Munia’ என்பது ஒரு பறவை.  சிட்டுக் குருவியை விட சிறியது.  தேன் சிட்டை விட உருவத்தில் சற்றே பெரியது. 

நம் நாட்டிலேயே ஐந்தாறு வித முனியாக்கள் உள்ளன.  அவை:

1.  நெல்லுக் குருவி என்றழைக்கப் படும் கருப்பு தலை கொண்ட முனியா (Black-headed munia),






2.  சிவப்பு ராட்டினம் என்ற பெயர் கொண்ட சிவப்பு முனியா (Red munia),






3.  பொரி ராட்டினம் என்றழைக்கப் படும் புள்ளி முனியா (Spotted munia).



http://www.finchworld.com/spice.html 



4. வெள்ளை ராட்டினம் எனப் பெயர் கொண்ட வெள்ளை முதுகுகொண்ட முனியா(White-backed munia),




5. வாயலாட்டான் அல்லது வெள்ளி மூக்கான் என்றழைக்கப் படும் வெள்ளைத் தொண்டை முனியா (White-throated munia).




6.  கருப்புத் தொண்டை கொண்ட முனியா (Black-throated Munia)






முனியாக்கள் கிட்டத்தட்ட வருடம் பூராவுமே இனப் பெருக்கம் செய்யும்.  அவை புல் வைக்கோல் இவற்றைக் கொண்டு பந்து போன்ற கூட்டினை அமைக்கும்.  பந்துக்குள் நுழைய பக்க வாட்டில் ஒரு வட்ட வடிவ நுழை வாயில் அமைகப் பட்டிருக்கும்.



தானியங்களைத் தின்று வாழும் இந்தப் பறவைகள், கூட்டம் கூட்டமாக வாழும் இயல்பு கொண்டவை.  சிட்டுக் குருவிகளைப் போல் அல்லாது இவற்றைக் கூண்டில் அடைத்து வீட்டில் வளர்க்க முடியும்.  இந்தத் தகுதியே இதன் முதல் எதிரி.
 
வனவிலங்குப் பாதுகாபு சட்டம் அமூலில் இருக்கிறதோ இல்லையோ பறவைகள் விற்கும் கடைகளில் அதிக அளவில் முனியாக்களைப் பார்க்கலாம். 

இந்தப் பறவைக்கு மற்றொரு எதிரியும் உண்டு.  அதுதான் சில நிலக்கரி சுரங்கங்கள்.  இந்த அழகிய பறவைக்கும் நிலக்கரிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறிர்களாஇருக்கிறது சம்பந்தம். 

நிலக்கரி சுரங்கங்களில் வெடி வைத்துத் தகர்த்த பின் அந்த இடத்தில் ஆட்களுக்கு அபாயம் விளைவிக்கக் கூடிய விஷ வாயு இருக்கிறதா என்று கண்டறிய ஒருவர் ஒரு கூண்டில் முனியாவை எடுத்துக் கொண்டு முன்னே செல்வார்.  முனியாவின் தலை சாய்ந்து உயிர் விட்டாலோ அல்லது உயிர் விடும்போல் தோன்றினாலோ உடனே ஆட்கள் எல்லோரும் பின் வாங்கி விடுவார்கள். 

பின்னர் குழாய்கள் மூலம் வெளிக் காற்றினை சுரங்கத்திற்குள் செலுத்தி விஷ வாயுவை வெளி ஏற்றுவார்கள்.  நாம் உயிர் பிழைப்பதற்காக பாவம் இந்தப் பறவைகள் உயிர் விட வேண்டும்!  இம் முறை ஐம்பதுகளில் பழக்கத்தில் இருந்து வந்தது.  தற்போது மின் அணு நுண் கருவிகள் முனியாவின் வேலையை எடுத்துக் கொண்டிருக்கலாம்.

முனியாவைப் பார்க்கும் போதெல்லாம், மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்று எனக்குத் தோன்றும்.  நாம் கண்டு களிக்க இறைவன் எப்படியெல்லாம் காட்சி யளிக்கிறார்!


நடராஜன் கல்பட்டு

      

Thursday, 14 March 2013


இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (26) மயில்

நம் இந்திய நாட்டின் தேசீயப் பறவை மயில்.  இதற்கு விஞ்ஞான ரீதியாக அளிக்கப் பட்ட பெயர் ‘Pavo cristatus’ என்பதாகும்.



பறவைகள் அனைத்திலுமே பார்க்க மிக மிக அழகானது மயில். அது தன் மின்னும் நீலப் பச்சை வண்ணத்திலும் சரி, தோகை விரித்தாடும் அதன் நடன நளினத்திலும் சரி ஈடு இணையற்ற ஒரு பறவை.

ஆணும் பெண்ணும் வண்ணத்தில் கிட்டத் தட்ட ஒரே மாதிரி இருக்கும்.  ஆனால் ஆண் பறவைக்கு மட்டும் தான் தோகை உண்டு.  தோகை என்பது வால் சிறகுகளின் மேல் வளரும் குச்சி போல் சுமார் இரெண்டடி முதல் மூன்றடி வரை நீளமுள்ள இறகுகள்.  இந்தத் தோகை இறகுகளில் தான் பார்ப்பவர்களை வியக்க வைக்கும் மயில் கண்கள் இருக்கும்.  இந்தக்கண்கள் வண்ண மிக்க மெல்லிய சிறகுகளால் ஆனவை.  தோகை விரித்தாடும்போது இந்தக் கண்கள் ஆங்காங்கே மிக அழகாகத் தெரியும்.


வால் சிறகின் மேல் வளர்ந்துள்ள தோகை இறகுகள்

நம் அனைவர் மனத்தையும் கவரும் கண்ணன் என்றவுடன் நமது
நினைவுக்கு வருவது அவன் தலையை அலங்கரிக்கும் அழகிய மயில் கண் கொண்ட இறகுகள்தானே.



மயில் ஆடுவது நாம் பார்த்து ரசிப்பதற்காக அல்ல.  அது இனப் பெருக்கம் செய்ய வேண்டிய காலத்தில் துணைதனை வசியம் செய்வதற்காக ஆடுகிறது.

ஆண் மயில் ஆடும்போது அதன் பின்னே சாதாரணமாக நீண்டு தொங்கிக் கொண்டிருக்கும் சிறகுகளை விரித்துக் கொண்டு மெதுவாக இப்படியும் அப்படியுமாகத் திரும்பும் வகையில் சிறு அடிகளை எடுத்து வைக்கும்.  அவ்வப்போது தன் தோகை சிறகுகளை பட பட வெனத் துடிப்பது போல ஆட்டும்.  இது கணகளுக்கு விருந்தாக இருக்கும்.

கண்களுக்கு விருந்தளிக்கும் மயிலின் குரலோ காதுகளுக்கு மிக நாராசமான ஒன்று.  காடுகளில் அதிகாலையில் மே..யாவ் மே..யாவ் என மயில் கத்துவது காட்டையே அதிர வைக்கும். இவை அதிகாலையில் மட்டும் கத்தும் என்பதில்லை.  புலி சிறுத்தை போன்ற மிருகங்கள் பதுங்கிப் பதுங்கி புதர்களில் மறைந்து செல்லும்போது மயில்கள் அவற்றுக்கு மேலாக மரத்துக்கு மரம் பறந்து சென்று மே..யாவ் மே..யாவ் என்று கத்தி மற்ற மிருகங்களுக்கு புலி சிறுத்தை பற்றித் தகவல் அறிவிக்கும்.

மயில் கூட்டம் கூட்டமாக வசிக்கும் ஒரு பறவை.  ஒரு கூட்டத்தில் ஒரு ஆணும் நான்கைந்து பெண் பறவைகளுமாக வாழும்.  முற்றிலும் வளர்ச்சியடையாத பறவைகள் ஒரே இனக் கூட்டங்களாக வசிப்பதும் உண்டு.

மயில், புதர்கள் அடியே சிறிய பள்ளம் செய்து அதில் சுள்ளிகள் இலைகள் இவற்றைச் சேர்த்து திறந்த கூடமைத்து அதில்  ஒரு கிண்ணப் பாலிலே இரண்டு சொட்டு காப்பிக் கஷாயம் விட்டது போன்ற வெளிர் பழுப்பு நிறத்தில் மூன்று முட்டைகளை இடும்.  முட்டைகளை அடை காப்பது பெண் மயிலே.

மயில் தரையில் தன் உணவைத் தேடும். உண்பது தானியங்கள், புழு, பூச்சிகள், பல்லி, ஓணான், பாம்பு எனப் பல வகையாகும்.

இந்துக்கள் வணங்கும் முருகக் கடவுளின் வாகனம் மயில்.

உலகப் புகழ் பெற்ற ராஜா ரவி வர்மா அவர்கள் வரைந்த இந்த முருகன் படத்தைப் பாருங்கள். மயிலின் கால் விரல்களின் பிடியில் பாம்பு.



மயிலினத்தில் மற்றொரு வகையும் உண்டு.  அதன் நிறம் பால் வெள்ளை.

வெள்ளை மயில்

மயில் இந்தியாவின் தேசீயப் பறவை. அப்படி இருந்தும் இந்தியாவில் மயிலைக் கொல்பவர் அனேகம்.  மயிலுக்கு முதல் எதிரி அதன் அழகிய தோகைப் பீலிகள்.  இதை வைத்து கை விசிறிகள் தயாரிக்க பலர் மயில்களைக் கொல்கின்றனர்.  கடைகளில் சாம்பிராணிப் புகை போட்டு காசு வாங்கிடுவோர் கையில் நீண்ட விசிறியாய் மயில் தோகை இறகுகள்.  

இரண்டாவது எதிரி இதன் ரத்தத்திலிருந்து தயாரிக்கப் படும் தைலமும் மயில் உடல் கொழுப்பும் பல வியாதிகளுக்கு மருந்து என நாட்டில் பரவியுள்ள தவறான நம்பிக்கைகள்.  

மயில்கள் அழிவதை நாம் தடுக்கவில்லை என்றால் அடுத்த சந்ததியினர் இவ்வளவு அழகிய ஒரு பறவையை படங்களில் தான் பார்க்க வேண்டி வரும்.

இந்திய மயிலுக்கு நீல மயில் என்றொரு பெயரும் உண்டு.  காரணம் இதன் நிறம் மின்னும் நீலப் பச்சை.  இந்தொனேசியா, பர்மா இங்கெல்லாம் காணப்படும் மயில் பச்சை வண்ணம் கொண்டது என்பதால் அது பச்சை பயில் என்றழைக்கப் படுகிறது.

வெள்ளை மயில் வெள்ளைப் புலி போன்று நீல மயிலின் மறுவிய தோற்றமே என்றெண்ணப் படுகிறது.

நீல மயிலினை ஒரே கூண்டில் நான்கைந்து மயில்களை ஒன்றாக வைத்து வளர்க்க முடியும்.  பச்சை மயிலை அவ்வாறு வளர்க்க முடியாதாம்.  காரணம் அவை ஒன்றோடொன்று சண்டையிட்டு இறந்து விடும் என்பதாம்.

ஒன்றுபோல் காணப் பட்டாலும் அவற்றுள் தான் எத்தனை வித்தியாசம்!


இயற்கையின் எழிலில் நீ எப்படியெல்லாம் எங்களுக்கு காட்சி தருகின்றாய் இறைவா!

(படங்கள் விக்கிபீடியா மற்றும் இதர தளங்களில் இருந்து)


நடராஜன் கல்பட்டு


Wednesday, 13 March 2013


இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்  (25) ஸால்மன் மீன்கள்

இயற்கையின் எழில் நமக்களிக்கும் பல விந்தைகளில் ஒன்று ஆங்கிலத்தில் ஸால்மன்’ (Salmon) என்றழைக்கப் படும் மீன்கள்.

   


இந்த மீன்கள் வாழ்வது உப்பு நீர் கொண்ட அட்லாண்டிக் மற்றும் பசிபிக் சமுத்திரங்களில்.  ஆனால் இவை பிறப்பதோ வட அமெரிக்காவில் உள்ள கொலம்பியா நதியிலும் அதன் உப நதிகளிலும் மற்றும் அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகிய இடங்களில் உள்ள நதிகளிலும் ஆகும்.

மீன் குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளி வந்த பின் முழு வளர்ச்சி அடய சுமார் ஒன்று முதல் மூன்றாண்டுகள் எடுத்துக் கொள்கின்றன.   பின்னர் அவை கடலை நோக்கித் தன் பயணத்தைத் தொடங்கும்.  அவ்வாறு பயணிக்கும் போது அவை சில காலம் சற்றே உப்பு நீராலான இடங்களில் (in brackish waters) வசிக்கும்.  அந்த நாட்களில் அவற்றின் உடலில் நல்ல தண்ணீரில் பிறந்த அவை உப்பு நீரில் வாழ்வதற்கான மாற்றங்கள் ஏற்படுகின்றன.  கடலை அடைந்த ஸால்மன் மீன்கள் சுமார் நன்கு ஐந்து ஆண்டுகள் பல ஆயிரம் மைல்கள் கடலில் சுற்றித் திரிகின்றன.

கடல் வாழ்க்கை முடிந்ததும் (அலுத்ததும்???) ஸால்மன் மீன் தான் பிறந்த இடத்திற்கே திரும்புகிறது.  திரும்பியதும் ஆற்றில் தனது வால் செதிள்களால் சிறு பள்ளம் தோண்டி பெண் மீன் அதில் சுமார் ஐயாயிரம் முட்டைகளை இடும்.  கூடவே நீந்திக் கொண்டு இருக்கும் ஆண் மீன் தனது விந்துக்களை அந்த முட்டைகளின் மீது தெளிக்கும்.  இது நடந்த பின் பெண் மீன் முட்டைகளை சிறு கற்களைக் கொண்டு மூடிவிடும்.  முட்டை இடும் வேலை நன்றே முடிந்த பின் சில நாட்களுள் தாயும் தந்தையும் இறந்து விடும்.


பெரிது படுத்தப் பட்டுள்ள, ஸால்மன் மீன் முட்டைகள்
(http://en.wikipedia.org/wiki/Image:Salmoneggskils.jpg)

முட்டைகளிலிருந்து வெளி வரும் குஞ்சுகள் பிறந்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு முட்டைப் பைக்குள் மிச்சம் மீதம் இருக்கும் கருவினை உண்டு வாழும்.  அதன் பிறகு குஞ்சுகள் மெதுவாக சிறு சிறு நீர் வாழ் உயிரினங்களை உண்ண ஆரம்பிக்கும்.



முட்டையிலிருந்து வெளி வந்த மீன் குஞ்சு (பெரிதாக்கப் பட்ட படம்)
(http://en.wikipedia.org/wiki/Image:Salmonlarvakils.jpg)
ஸால்மன் மீன் பல ஆயிரம் முட்டைகளை இட்டாலும் அவற்றில் நூற்றுக்குத் தொண்ணூறு குஞ்சுகள் மீன் உண்ணும் கடல் வாழ் உயிர் இனங்களுக்கும், பறவைகளுக்கும், மனிதனுக்கும் இறையாகி விடுவதால் சுமர் பத்து சதவிகிதமே கடலைச் சென்று அடையும்.

முட்டை இடத் திரும்பும் மீன்கள் ஆற்று நீரின் வேகத்தினை எதிர்த்து, கடல் மட்டத்தில் இருந்து பல ஆயிரம் அடிகள் உயரத்திற்கு அந்த ஆறுகளில் ஒடும் நரில் நீந்தி தன் பிறந்த வீட்டினை அடைய வேண்டும்.

மனிதர்களின் மேம்பாட்டுக்காக ஆறுகளில் கட்டப்பட்ட அணைகள்
ஸால்மன் மீன்கள் எளிதாக நீந்தி தன் பிறந்த இடங்களுக்குப் போய்ச் சேர்வதில் தடங்கல் ஏற்படுத்தியதால் ஸால்மன் மீன்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.  மீன் பிடிப்பதை நம்பி வாழ்வோரின் வருமானமும் குறைய ஆரம்பித்தது.  முதல் முதலாக பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த சிலர் ஸால்மன் மீன்கள் அணைகளைத் தாண்டி தன் பிறந்த வீட்டிற்குச் செல்வதற்காக மரக் கட்டைகளைக் கட்டி படிகள் அமைத்து அதன் வழியே கொஞ்சம் நீரைச் செலுத்தி மீன்கள் ஏறிச் செல்வதற்காக மாற்றுப் பாதை அமைத்தனர்.

சமீப காலத்தில் ஸால்மன் மீன்கள் ஏறிச் செல்வதற்காக அணைகளின் பக்கத்தில் சிமெண்ட் கான்க்ரீட்டால் ஆன படிக் கட்டுகளையே (Fish ladder) அமைக்க ஆரம்பித்துள்ளனர்.  இது மட்டும் அல்ல.  சில இடங்களில் மின்சாரத்தினால் இயங்கும் மீன் தூக்கிகளையும் (Elevators) அமைத்துள்ளனர்.

இவ்வாறெல்லாம் ஸால்மன் மீன்கள் பிறந்த வீடு செல்ல வழி அமைத்துக் கொடுப்பது முற்றிலும் வியாபார நோக்கினால் மட்டுமே என்றாலும் அவை ஸால்மன் மீன்கள் இவ்வுலகில் இருந்து மறைந்து விடாமல் இருக்க உதவுகின்றன.  இதோ ஒரு மீன் ஏணியைப் பாருங்கள்.


அணைக்கட்டின் பக்கத்தில் மீன்கள் ஏறிச்செல்ல மீன் ஏணி
(http://en.wikipedia.org/wiki/Image:John_Day_Dam_fish_ladder.jpg)

நம் நாட்டில் அணைக்கட்டுகளிலும் மதகுகளிலும் மீன்கள் அதி வேகமாக விழும் நீரை எதிர்த்துத் துள்ளிக் குதிப்பதை நாம் பார்க்கிறோமே. அவையும் தன் பிறந்த வீடுகளுக்குச் செல்லத் துடிக்கும் பெற்றோர்கள் தானோ?

பிள்ளை பெறப் பிறந்த வீடு திரும்பும் ஸால்மன் மீன்கள் பல ஆயிரம் மைல்கள் கடலில் சென்று பின் பிறந்த வீடு திரும்ப தனது மோப்ப சக்தியை உபயோகிப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.  பல ஆறுகளிலிருந்தும் நீர் கடலில் கலக்கின்றதே.
அப்போது வாசனையும் கலந்து விடாதா?  அப்படி இருக்க பிறந்த வீட்டு நீர் வாசனை மீன்களுக்கு எப்படித் தெரிகின்றது?

இயற்கையின் எழிலில்தான் எத்தனை வினோதங்கள் வழியே நீ எங்களுக்குக் காட்சி தருகின்றாய் இறைவா!

  (படங்கள் விகிபீடியாவிலிருந்து)

                                            நடராஜன் கல்பட்டு
                                      

Saturday, 9 March 2013


இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (24)
பிணம் தின்னிக் கழுகு அல்லது பெருங்கழுகு  (Vulture)

http://en.wikipedia.org/wiki/File:Gyps_rueppellii_-Nairobi_National_Park,_Kenya-8-4c.jpg

இறைவன் எந்த ஒரு உயிரிடத்தும் பாரபட்சம் காட்டுவதில்ல.  ஒவ்வொன்றும் அது வாழ்வதற்கேற்ற அமைப்புககளை, தேவைகளை அளிக்கிறான்.  உதாரணம் வேண்டுமா  படியுங்கள் மேலே.

பிணம் தின்னிக் கழுகு என்று ஒரு பறவை.  இது நாம் சாதாரணமாகப் பார்க்கும் கருடன், கழுகு, வல்லூறு இவைகளின் இனத்தை சேர்ந்தது.  ஆனால் உருவத்தில் பெரியது.  இவற்றின் உணவு இறந்த அல்லது இறந்து கொண்டிருக்கும் மிருகங்களின் மாமிசம்.  ஏன், உலகெங்கும் உள்ள பார்ஸீ என நாம் அழைக்கும் சொராஷ்ட்றியன் (சூரிய உபாசிகள்) என்ற இனத்தவரது இறந்த உடல்கள் கூடத்தான் இப்பறவைகளின் உணவு.


http://jameswhipple.info/images/uploads/Parsee_Tower_of_Silence_Bombay.jpg
பார்ஸீக்கள் ஊரில் ஒரு உயரமான இடத்தில் அகலமான வட்ட வடிவிலான தொட்டி ஒன்றைக் கட்டி வைத்திருப்பார்கள்.  அதற்கு அமைதியின் கோபுரம் என்று பெயர்.  ஆங்கிலத்தில் Tower of silence என்றழைப்பார்கள் அதை.  இறந்தவர்களின் உடலை அதனுள் எறிந்து விடுவார்கள் பார்ஸீக்கள்.  அவ்வாறு எறியப் பட்ட உடல்கள் பிணம் தின்னிக் கழுகுகளுக்கு உணவாகும்.

பிரதேசத்துக்குப் பிரதேசம் இந்தக் கழுகுகளின் தலை கழுத்து இவற்றின் நிறம் மஞ்சள், சிவப்பு, வெள்ளை, வெளிர் கருப்பு என மாறு பட்டாலும் ஒரு விதத்தில் இப்பறவைகள் ஒரே மாதிரி இருக்கும்.  தலையிலும் கழுத்திலும் சிறகுகள் இருக்காது மற்ற பறவைகளைப் போல இவற்றுக்கு.  இது ஏன் தெரியுமா?

  Griffin vulture
வெள்ளைத் தலை

 Turkey_vulture_Bluff.jpg
 சிவப்புத் தலை

இந்தப் பறவைகள் பிணத்தினைக் கிழித்து உள்ளிருந்து மாமிசத்தைப் பிய்த்தெடுத்துத் தின்னும்போது ரத்தமும் வேறு சில திரவங்களும் தலையிலும் கழுத்திலும் ஒட்டிக்கொள்ளும்.  சிறகுகள் இருந்தால் அவற்றுக்கடியில் தங்கிவிடும் இப் பொருட்களில் இருந்து கிருமிகள் உண்டாகும்.  சிறகுகள் இன்றி மொட்டையாக இருக்கும் கழுத்து தலை இவற்றின் மீது படிந்துள்ள இப்பொருட்கள் சற்று நேரத்தில் வெய்யிலும், காற்றும் பட்டுக் காய்ந்து விடுமாதலால் கிருமிகள் உண்டாகாது.

இவ்வகைக் கழுகுகள் தங்கள் கழுத்தின் நீளத்தினை தேவையான அளவு நீட்டவோ குறைத்துக் கொள்ளவோ முடியும்.  இது எதற்காக தெரியுமா?  பிணத்தின் உள்ளே தலையை விட்டு மாமிசம் பிடுங்கத்தான்.



மேலே உள்ள படத்தில் கழுகு தன் கழுத்தின் நீளத்தை சற்றே குறைத்துக் கொண்டிருப்பதால் தோலில் சுருக்கம் தெரிகிறது பாருங்கள்.

பிணம் தின்னிக் கழுகுகளுக்கு இறைவன் அளித்துள்ள வரங்கள் இன்னும் சில உள்ளன.  ஒன்று அவற்றின் கூரி வளைந்த அலகுகள்.  மற்றொன்று கண்களிலே மூன்றாவது இமை.


மூன்றாம் இமை

நம் கண் இமைகளை நாம் அடிக்கடி சிமிட்டுவது விழிகளில் எப்போதும் ஈரப் பசை இருக்க வேண்டும், கண்ணில் விழும் தூசியினை அவ்வப்போது ஓரம் கட்ட வேண்டும் என்பதற்காக.  இந்த வசதி கழுகிற்கும் வேறு சில பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் சற்று அதிகமாகவே தேவைப் படுகிறது.  காரணம் அவை உணவு தேடும் விதம்.  ஆகவேதான் இறைவன் அவற்றிற்கு இந்த மூன்றாவது இமையினை அளித்திருக்கிறான்.

தெரிகிறதா கரு விழியையும் சற்றே முடிய மூன்றாம் இமைமூன்றாம் இமை, (ஆங்கிலத்தில் இதன் பெயர் Nictitating membrane என்பதாகும்.), மேலும் கீழுமாக அசைவதில்லை.  பக்க வாட்டில் நகரும்.  கழுகினத்தின் மூன்றாம் இமை முற்றிலும் ஒளி ஊடுருவிச் செல்வதாக அமைந்தது அல்ல.  சிறிது குழம்பியே இருக்கும்.  ஆனால் கோழிக்கும் வேறு சில பறவைகளுக்கும் இந்த மூன்றாம் இமை தெள்ளத் தெளிவாக இருக்கும். 


http://en.wikipedia.org/wiki/File:Chickenblinking.jpg
கோழியின் தெள்ளத் தெளிவான மூன்றாம் இமை

கோழி குப்பை மேட்டில் மண்ணைக் கிளறி இரை தேடும்போது அதன் கண்களில் மண்ணும், தூசியும் கட்டாயம் விழும்.  இதை எதிர் கொள்ளத்தான் கோழிகளுக்கு இந்த மூன்றாம் இமை.

மரங்கொத்திக்கும் மூன்றாம் இமை உண்டு.  அது மரத்தினை வேகமாகக் கொத்தும்போது விழிகள் வேளியே தெறித்து விடாமல் இருக்க அது தன் மூன்றாம் இமைகளால் தன் கண்களை இறுக்க மூடிக்கொள்ளுமாம்.

கழுகை விட்டு அதிக தூரம் போய் விட்டோம்.  மீண்டும் கழுகுக்கு வருவோம்.

சொல்ல மறந்த ஒரு விஷயம் இந்தக் கழுகுகளின் கண், மூக்கு இவற்றின் அபார சக்தி பற்றி.  ஆகாயத்தில் பல ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போதே தரையில் எங்கு ஒரு மிருகம் செத்துக் கொண்டிருக்கிறது அல்லது செத்துக் கிடக்கிறது என்பதை மிகத் துல்லியமாகக் கண்டறிய வல்லது இப்பறவை.

எகிப்தியக் கழுகு என்னும் கழுகு பிணந்தின்னிக் கழுகளை விட உருவத்தில் சற்றே சிறிதானது.  மஞ்சள் நிறத் தலையும் வெள்ளை நிறச் சிறகுகளையும் கொண்ட ஒரு வகைக் கழுகு இது.  இதை கிராமப் புரங்களில் பார்க்கலாம்.  இவை இறந்த உயிரினங்களைத் தின்பதோடு மட்டும் அல்லாமல், கசாப்புக் கடைக் காரர்கள் எறிந்திடும் கழிவுப் பொருட்களையும் தின்று தீர்க்கும்.  அவ்வளவு ஏன், மனித மலத்தினையும் உண்ணும்!  இந்த வகைக் கழுகின் பெயர் ஆங்கிலத்தில் ‘Scavenger vulture அல்லது ‘Pharaoh’s chic’ என்பதாகும்.  ஆதி நாளைய எகிப்த்திய மன்னர்களின் கிரீடத்தினை அலங்கரித்தவை இவை.



தமிழ் நாட்டில் திருக்கழுக் குன்றத்தில் தினம் பகல் பன்னிரெண்டு மணிக்கு அங்குள்ள வேதகிரீஸ்வரரின் கோவில் பூஜாரி இறைவனுக்கு நெய்வேத்தியம் செய்த சர்க்கரைப் பொங்கலை ஒரு கல்லின் மீது வைக்க எங்கிருந்தோ வரும் இரு எகிப்தியக் கழுகுகள் அதை உண்ணும் காட்சியை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் நேரில் கண்டிருக்கிறேன்.  (இப்போதெல்லாம் அவை வருவதில்லை என்று சொல்கிறார்கள் சிலர்.)

இந்தப் பறவைகள் இரு ரிஷிகள் என்றும், அவர்கள் தினமும் கங்கை, திருக் கழுக்குன்றம், ராமேஸ்வரம் ஆகிய இந்த மூன்று இடங்களுக்கும் சென்று வருவதாகவும் சொல்வார்கள்.  ஸ்தல புராணத்திலும் இது இருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன்.

இந்தக் காட்சி பறவைகள் நிபுணர் காலஞ்சென்ற டாக்டர் சாலிம் அலி அவர்களையே வியக்கச் செய்தது.  இந்தியப் பறவைகள் பற்றிய அவரது புத்தகத்தில் எழுதி உள்ளார், இப்பறவைகள் ஒரு மனிதனால் பழக்கப் பட்டவை என்றால் அவற்றைப் பழக்கப் படுத்தியவர் யார்?  ஒரு ஜோடிப் பறவைகள் இறந்தால் அடுத்த ஜோடியினைத் தயார் செய்வது யார்?  ஏன் ஒரு ஜோடியே வருகின்றன? என்று.

எகிப்தியக் கழுகு ஒன்று அல்லது இரண்டு முட்டை இட்டுக் குஞ்சு பொரிப்பது கோவில் கோபுரங்களிலோ அல்லது பாழடைந்த கட்டிடங்களிலோ.  குஞ்சுகளுக்கு அவை அளித்திடும் உணவு பாம்பு, ஓணான், தவளை போன்றவை.  குஞ்சுகளின் சிறகுகளின் நிறம் தாய் தந்தைப் பறவையின் நிறத்திற்கு நேர் மாறானது.  பெரிய பறவைக்கு எங்கெல்லாம் வெள்ளைச் சிறகுகள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் குஞ்சுக்கு கருப்புச் சிறகுகளும், எங்கெல்லாம் கருப்புச் சிறகுகள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் வெள்ளை சிறகுகளும் இருக்கும்.  குஞ்சுகள் வளர்ந்திடும் போது நிறம் முற்றிலுமாக மாறி விடும்!

இயற்கையில் தான் எத்தனை வேடிக்கை காட்டுகிறான் இறைவன்!


நடராஜன் கல்பட்டு