Monday, 4 February 2013


இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (17) பூ நாரை
 

நாரை இனத்திலே பூ நாரை என ஒன்று.  இதை சங்குவலை நாரை, வர்ண நாரை என்றும் அழைப்பார்கள்.  விஞ்ஞான
ரீதியாக இதற்களிக்கப் பட்டு உள்ள பெயர் ‘Ibis leucocephalus’ என்பதாகும்ஆங்கிலத்தில் இதனை ‘Painted stork’ என்பர். 
பூ நாரையின் பெயர்கள் எல்லாமே காரணப் பெயர்கள் தான்.  மஞ்சள் நிற அலகுகள், மெழுகினால் செய்தது போன்ற ஆரஞ்சு நிறத் தலை, இறக்கை களில் மயில் கழுத்தென மின்னும் கருப்புக் கோடுகள், பாலெனத் தோன்றும் வெள்ளை உடல், மார்பிலே ஒரு கருப்புப் பட்டை, இறக்கைகளின் நுனி சிறகுகளிலும், வால் சிறகுகளின் மேல் புறத்திலும் மிக சன்னமாக ஒரு ரோஜாவின் வண்ணம், சாம்பல் பூத்த ரோஜா நிறக் கால்கள் என ஒரு ஓவியன் துரிகை கொண்டு வர்ணம் தீட்டி இருப்பது போல இருப்பதால் தான் இந்தக் காரணப் பெயர்கள்.
            

(http://en.wikipedia.org/wiki/Image:Painted_Stork.jpg) 

பூ நாரை வெளி நாட்டிலிருந்து நம் நாட்டுக்கு வலசை வரும் பறவை அல்ல.  உள் நாட்டிலேயே வாழும் பறவை தான்.  இவை செப்டம்பர் முதல் ஜனவரி வரையிலான நாட்களில் இனப் பெருக்கம் செய்யும்.  இனப் பெருக்கம் செய்யும் இடங்களில் மற்ற நாட்களில் காணப் படுவதில்லை என்பதால் பலர் இதனையும் வலசை வரும் பறவைகளின் பட்டியலில் சேர்த்து விடுகின்றனர்.

பூ நாரைகள் சாலையோர மரங்களிலோ, கிராம வீடுகள் நடுவே உள்ள புளிய மரம் போன்ற மரங்களிலோ கூட்டமாக பல ஜோடி பறவைகள் கூடுகள் கட்டி, முட்டை இட்டுக் குஞ்சு பொரித்து வாழும்.  ஆனால் சாதாரணமாக மக்கள் இவற்றைத் துன்புறுத்துவது இல்லை.  காரணம் தெரிய வேண்டுமா?

முன்னாள் முதல்வர் ப்ரகாசம் அவர்கள் ஊரான ஆந்திர மாநிலம் டங்குடூரு அருகில் உள்ள ஜருகுமல்லி என்ற கிராமத்தின் தலைவருடன் 1976ல் தெலுங்கில் நடந்த ஒரு சம்பாஷணையின் தமிழாக்கத்தைப் படியுங்கள்.

ஏன் சார், நாம பேசறது கூடக் காதுலே விழாதபடி இப்படி கா...கா... ன்னு கூச்சல் போட்டுகிட்டு இருக்குதுங்களே இந்தப் பறவைங்க. ஒங்களுக்கெல்லாம் தொந்திரவா இல்லயா?  ஊர் ஜனங்க இதுங்களெ வெரட்டறது இல்லயா?”

தொந்திரவு என்ன சார் தொந்திரவு?  இந்தப் பறவைங்க எங்க ஊருக்கு வந்திச்சுன்னா இந்த வருஷம் மழை நல்ல பேஞ்சு ஏரி குளமெல்லாம் நெறெஞ்சு வெளெச்சல் அமோகமா வரும்னு தெரிஞ்சுடும்.  அதுங்களெ நாங்க ஏன் சார் வெரட்டணும்?”

சரி சத்தத்தெ உடுங்க.  தரையெல்லாம் வெள்ளை அடிச்சாப்ளெ பறவை எச்சமும் மீன் துண்டுங்களுமா கெடக்குது.  நாத்தம் வயத்தெக் கொமட்டி வாந்தியெடுக்க வருது.  இது கஷ்டமா இல்லியா ஒங்களுக்கு?”  (இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே என்மேல் ஒரு பறவையின் எச்சம் விழுகிறது)

சார் இந்தப் பறவைங்க வயல்கள்லெ மேஞ்சுகிட்டு இருக்கும் போது போடுற எச்சமும், இங்கெ தரெலெ கெடெக்கற எச்சமும் அறெகொறெயாக் கடிச்ச மீன் துண்டுங்களும் நல்ல ஒரமாகுது.  இது மட்டுமா.  அப்பொப்போ ஊர் சனங்களுக்கு கருவாடும் கெடைக்குது.  எப்படிங்கிறீங்களா?  பறவைங்க குஞ்சுங்களுக்கு மீனெக் கொண்டு வந்து கொட்டும்போது கொஞ்சம் கீளேயும் விளும்.  ஊர் செனம் ஏன் சார் இதுங்களெ வெரெட்டுவாங்க?”

இப்போது புரிகிறதா பூ நாரைகள் ஜன நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களிலும் எப்படி கூடுகள் கட்டி குடும்பம் நடத்த முடிகிறது என்று?


(ஜருகுமல்லியில் பூநாரையும் அதன் பூப்பந்து போன்ற குஞ்சுகளும்)

பூ நாரைகளின் கூடு குச்சிகளால் ஆன சுமார் 2 3 அடி விட்டமுள்ள ஒரு வட்ட வடிவமான மேடை போன்றது.  நடுப் பாகம் சற்றே பள்ளமாக இருக்கும்.  பள்ளத்தில் இலைகள் மற்றும் காய்ந்த புல், வைக்கோல் இவை இருக்கும். 

ஒவ்வொரு முறை பெரிய பறவைகள் வந்திறங்கும் போதும், குஞ்சுகள் நகரும் போதும் சில குச்சிகள் கீழே விழுந்து விடும்.  ஆகவே அவற்றுக்குப் பதிலாக வேறு குச்சிகளைக் கொண்டு வந்து கூட்டினை சரி செய்ய வேண்டி வரும்.  இந்த ரிபேர் வேலை பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு காட்சி.  எப்படி என்கிறீர்களா?

கூட்டில்குஞ்சுகள் இருக்கும் போது எப்போதும் ஒரு பறவை காவல் காத்துக் கொண்டு இருக்கும் தனது இறக்கைகளை சற்றே விரித்து குடைபோல நிழல் கொடுத்துக் கொண்டு.

(நிழற்கொடை)

வெளியே சென்று இரையுடன் திரும்பும் பறவை தன் அலகிலே ஒரு குச்சியையும் கொண்டு வரும்.

(கூடு ரிபேருக்குக் குச்சி வருது) 

குச்சி கொண்டு வந்த ப்றவை தானே ரிபேர் வேலையைத் தொடங்காது.  பதிலாக உட்கார்ந்திருக்கும் பறவையிடம் கொடுக்கும் ஏதோ அரச சபையிலோ அல்லது ஜனாதிபதி வீட்டிலோ ட்யூடீ மாறும் காவலர்கள் போல.  அதுவரை காவல் பணியில் ஈடுபட்டிருந்த பறவை கூட்டினை சரி செய்யும்.  பின்னர் இருவருமாக பாசத்துடன் அலகுளால் ஒன்றை ஒன்று மாறி மாறி தட்டிக்கொள்ளும் முத்தமிடுவது மாதிரி.  குஞ்சுகள் பசியில் வாயைப் பிளந்து கவான் கவான் என்று கத்திக் கொண்டு இருக்கும்.  ஆனால் சடங்குகள் பூர்த்தியாக முடியாமல் அவை கவனிக்கப் படமாட்டா.

குஞ்சுகளுக்கு இரை ஊட்டுவதும் ஒரு காணவேண்டிய காட்சி.  இரை கொண்டு வரும் பறவை ஒரே ஒரு மீனைக் கொண்டு வராது.  தொண்டை, கழுத்து மற்றும் வாய் பூராவும் மீன்கள் தான்.  அவற்றினை ஒவ்வொன்றாகக் கக்கி குஞ்சுகளுக்குக் கொடுக்கும்.  அப்போது சில மீன்கள் கூட்டிற்குள்ளேயும் சில கீழேயும் விழும்.  அப்படி நடக்கும்போது குஞ்சுகள் இரைக்காகக் கெஞ்சினாலும் மேலும் மீனை வயிற்றிலிருந்து வெளியே கொண்டு வராமல் அதோ பார் அங்கே ஒன்று”, என்பது போல கூட்டில் கிடக்கும் மீனைக் காட்டும்.  குஞ்சுகள் தானாக அதைப் பொறுக்கித் தின்ன வில்லை என்றால் பெரிய பறவை அந்த மீனைத் தானே எடுத்துக் குஞ்சுக்குக் கொடுக்கும்.  

(இங்கெ கெடெக்குது பாருங்க ரெண்டு மீனு)

ஐந்தறிவே படைத்தது என்று நாம் எண்ணும் பறவைகளுக்கும்தான் எத்தனை அறிவு!

தமிழ் நாட்டில் பூ நாரையை திருநெல்வேலி ஜில்லாவின் மூன்றடைப்பு என்ற இடத்திலும், தஞ்சை ஜில்லாவின் கோடியக்கரையிலும் காணலாம்.

இயற்கையின் எழிலைக் கண்டு ரசியுங்கள்.  இறைவனைக் காண்பீர்கள்.

                                            நடராஜன் கல்பட்டு

                                           (கருப்பு   வெள்ளை படங்கள் எடுத்தது நடராஜன் கல்பட்டு)    

Friday, 4 January 2013


இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (16) ஆலா

ஆலா என்று ஒரு பறவை.  இதை ஆங்கிலத்தில் டெர்ன் (Tern) என்பார்கள்.  இந்த இனப் பறவையில் உலகிலேயே அதிக தூரம், சுமார் 12,000 மைல்கள் ஒரு வழியில், வட துருவப் பிரதேசத்திலிருந்து தென் துருவப் பிரதேசத்துக்கு குளிர் நாட்களில் பறந்து இடம் பெயரும் ஆர்டிக் ஆலாவிலிருந்து நம் நாட்டிலேயே வாழும் இருபத்துமூன்று வித ஆலாக்களோடு, கிட்டத் தட்ட நாற்பத்தைந்து ரக ஆலாக்கள் அடக்கம். 


ஆர்டிக் ஆலா ஜோடி
(http://www.thewe.cc/thewei/&_/arctic/arctic_terns.jpe)
ஆலா பருமனில் புறாவை விட சற்றே மெலிந்திருக்கும்.  நீண்டு, அகலக் குறைவான, வளைந்த இறக்கைகளைக் கொண்டது ஆலா. அதன் வால் சிரகுகள் மீனின் வால் பொன்ற அமைப்பில் இருக்கும்.  இறக்கைகளின் மேல் புரம் சாம்பல் நிறத்திலும் அடிப் புரமும் வயிறும் வெள்ளையாகவும் இருக்கும்.  இப்பறவையின் கால்கள் குட்டையானவை.  தலை, கழுத்து, மார்பு, வயிறு, கால்கள், அலகு இவற்றின் நிறம் ஒவ்வொரு வகை ஆலாவில் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.

ஆலாக்கள் இரை தேடுவதற்காக ஆறு, ஏரி, கடல் இவற்றுக்கு மேல் ஒரு கூட்டமாகப் பறந்து சென்று கொண்டிருக்கும்.  திடீரென ஒரு ஆலா செங்குத்தாக நீருக்குள் விழுந்து அடுத்த கணம் வாயில் ஒரு மீனுடன் வெளி வந்து விண்ணில் பறக்கும்.  அப்படிப் பறக்கும் போதே வாயில் உள்ள மீனை உயரத் தூக்கி எறிந்து மீன் தலை கீழாக வரும் போது மீண்டும் அதனைக் கவ்வி விழுங்கும்.  ஏன் இப்படிச் செய்கிறது தெரியுமாஇல்லை என்றால் மீனின் செதிள்கள் பறவையின் தொண்டையில் சிக்கிக் கொள்ளும். மீன் உள்ளே போகாது.

வேடர்கள் துப்பாக்கியால் சுட்டால் துப்பக்கித் தோட்டாக்களினால் அடி படுகிறதோ இல்லையோ ஐந்தாறு ஆலாக்கள் அடிபட்டு செத்து விட்டது என எண்ணும்படி சிறிது தூரம் கீழே விழுவது போல போக்குக் காட்டிவிட்டு மீண்டும் பறந்து போய்விடும்.  இவ்வாறு செய்வது பயத்தினாலா அல்லது செத்து விழும் என நம்பி ஆலாக்களைப் பொறுக்குவதற்காக துப்பாக்கியைக் கீழே வைத்துவிட்டு விறையும் வேடனை ஏமாற்றவா என்பது அந்த ஆண்டவனுக்குத் தான் தெரியும்.

ஆற்று ஆலா (River Tern) என்ற பறவையை நம் ஊர்களில் ஆறு, ஏரிகளின் அருகில் காணலாம்.  இவற்றின் கால்கள் சிவப்பு நிறத்திலும் அலகுகள் மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.  கோடை காலத்தில் தலையும் பின் கழுத்தும் கருப்பு நிறமாக இருக்கும்.

ஆற்று ஆலா (River Tern)
River_tern.jpg (480 × 320 pixels, file size: 24 KB, MIME type: image/jpeg)

உடலை விட நீளமான இறக்கைகள் கொண்டது ஆலா
 Smallarctern.jpg (434 × 242 pixels, file size: 190 KB, MIME type: image/jpeg)

ஆலாக்களின் இறக்கைகள் நீளமாகவும் பின்புறமாக வளைந்தும் இருப்பதால் அவை தரையில் உட்கார்ந்திருக்கும் போது வலது இறக்கையின் நுனி உடலின் இடது பக்கமும், இடது பக்க இறக்கையின் நுனி உடலின் வலது பக்கமும் வெளியே நீட்டிக் கொண்டு இருப்பதைப் பார்க்கலாம்.

இயற்கையின் எழிலை ரசியுங்கள்.  இறைவனைக் காண்பீர்கள்.


                                            நடராஜன் கல்பட்டு

                                            





Wednesday, 2 January 2013


 இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (15) கசாப்புக் காரன்

பறவைகளில் தையல் காரரைப் பார்த்தோம்.  நெசவாளரைப் பார்தோம்.  தச்சுவேலை செய்பவரைப் பார்த்தோம். கட்டிடத் தொழிலாளரைக் கூட பார்த்தோம்.  ஒரு கசாப்புக் கடைக் காரரையும் பார்க்க வேண்டாமா?

அசுரக் கிளி அல்லது கசாப்புக் காரன் என்று ஒரு குருவி.  இதன் ஆங்கிலப் பெயர் ஷ்ரைக் அல்லது புச்சர் பேர்ட் (Shrike or Butcher bird) என்பதாகும்.

இந்தப் பறவைக்கு ஏன் இந்த வினோதப் பெயர் தெரியுமா?  இது தனக்குக் கிடைக்கும் ஆகாரத்தை, அதாவது வெட்டுக்கிளி, ஓணான், சிறு பறவைகள் போன்றவற்றை, வேலமரம் போன்ற ஒரு மரத்தின் நீண்ட முட்களில் குத்தி வைத்துக் கொள்ளும்.  பின்னர் பசி எடுக்கும்போது நிதானமாக தான் சேகரித்து வைத்த மாமிசத்தை உட்கொள்ளும்.  வேறு ஏதேனும் ஒரு பறவயோ, விலங்கோ அந்த மரத்தினை நெருங்கினால் அவற்றைத் துரத்தித் துரத்தி விரட்டி அடிக்கும்.  அசுரக்கிளி தான் போங்க!

நம் கசாப்புக் காரர் வியாபாரத்துக்குக் கடை திறக்கவில்லை.  சொந்த உபயோகத்திற்காகத் தான் கடை திறந்திருக்கிறார் என்பது மற்றப் பறவைகளுக்குத் தெரியாது போலும் !

இந்தியாவில் சுமார் ஐந்தாறு வகையான கசாப்புக் காரக் குருவிகள் உள்ளன.  அவற்றில் தமிழ் நாட்டில் பே பேக்ட் ஷ்ரைக் என்பதையும், க்ரே ஷ்ரைக் என்பதையும் (Bay backed shrike and Grey shrike) நாட்டுப் புரங்களிலும், தரிசுக் காடுகளிலும் காணலாம்.  முட்கள் உள்ள மரம் அருகில் கட்டாயம் இருக்கவேண்டும்.  அடுத்த பக்கத்தில் பாருங்கள் சாம்பல் நிற கசாப்புக்க காரர் எப்படிக் கடை திறந்து வைத்திருக்கிறார் என்று.
                                                  
கசாப்புக் காரர் கடையில் ஒரு சுண்டெலி
(http://upload.wikimedia.org/wikipedia/commons/4/44/Lanius_excubitor_1_%28Marek_Szczepanek%29.jpg)

இவர் கடையில் ஒரு கோழிக் குஞ்சு
                                                                                                                     
செம்முதுகு கசாப்புக் காரன் (Bay backed Shrike (http://en.wikipedia.org/wiki/Image:Bay-backed_Shrike_(Lanius_vittatus) _at_Sultanpur_I_Picture_052.jpg)                                                  
                                                                            
இயற்கையின் எழிலில் நமக்கு இறைவன் காட்டும் விந்தைகள் தான் எத்தனை !


                                      நடராஜன் கல்பட்டு   


                                                                 

Saturday, 29 December 2012


இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (14) பக்கி

ஒரு பொருள் தனக்குக் கிடைக்க வேண்டுமே என்பதற்காக லோ லோ என்று அலைபவனை ஏண்டா பக்கியாட்டம் அலயறே ?” என்று கேட்பார்கள்.

பக்கி என்றே ஒரு பறவை உண்டு.  அதுதான் ஆங்கிலத்தில் நைட்ஜார் (Nightjar) என்றழைக்கப் படும் பறவை.  இதற்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் மற்றுமொரு பெயரும் உண்டு.  தமிழில் பாதுகைக் குருவி என்றும் ஆங்கிலத்தில் கோட் ஸக்கர் (Goat sucker) என்றும் இதனை அழைக்கின்றனர்.  இப்பெயர்கள் காரணப் பெயர்கள்.  இது பற்றி பின்னர் பார்ப்போம்.

விஞ்ஞான ரீதியாக இதற்கு அளிக்கப்பட்ட பெயர் கேப்ரிமல்கஸ் ஏஷியாடிகஸ் (Caprimulgus asiaticus) என்பதாகும்.  கேப்ரிமல்கஸ் என்றால் லத்தீன் மொழியில் ஆட்டுப் பால் உரிஞ்சி என்று பொருள்.

பக்கி  பகலில் படுத்துறங்கி இறவில் வெளிக் கிளம்பும் விட்டில் பூச்சிகளைப் பிடித்துத் தின்னும் ஒரு பறவை.  பறந்து கொண்டு இருக்கும் போதே பூச்சிகளைப் பிடிக்க லாயக்காக அகலமான வாயினையும், அலகின் இரு பக்கங்களிலும் பூனைக்கு மீசை முளைத்திருப்பதைப் போன்ற ரோமங்களையும் கொண்டது பக்கி.

இரவில் நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் உட்கார்ந்திருக்கும் இப் பறவையின் கண்கள் காரின் விளக்கு வெளிச்சத்தில் சிவப்பு ஆபரணக் கற்கள் போன்று பிரகாசிக்கும்.  காரின் விளக்கு ஒளியில் தென்படும் விட்டில் பூச்சிகளை பறந்து சென்று பிடித்துத் தின்னும்.  அவ்வாறு ரோடின் குறுக்கே பறந்து செல்லும் போது சில சமயம் காரில் அடிபட்டு விழுவதும் உண்டு.


சிவப்பு ஆபரணக் கல் போன்று ஜ்வலிக்கும் கண்
(http://orientalbirdimages.org/search.php?action=searchresult&Bird_ID=579)

இப்பறவை படுத்துறங்குவது ஆற்றுப் படுகைகளிலும், தரிசல் காடுகளிலும் காணும் செடிகளின் அடியிலோ அல்லது மரக் கிளைகளிலோ. அப்படிக்  கிளைகளில் உறங்கும் போது மற்ற பறவைகளைப்  போல குறுக்கு வாட்டில் உட்காராமல் நீள வாட்டில் உட்கார்ந்து தூங்கும்.  ஏன் தெரியுமா?  அப்பொதுதானே மரப் பட்டையோடு ஒன்றி விடும் பக்கி, மரக்கிளையில் உட்கார்ந்திருப்பது அதன் எதிரிகளுக்குத் தெரியாது.

உறக்கம் என்றால் ஆழ்ந்த நித்திரை அல்ல.  இதன் கண் இமைகள் முற்றிலுமாக மூடி இருக்காது.  சிறிய கீற்றாகத் திறந்திருக்கும்.  இவ்வாறு ஆழ் நித்திரை இன்றி உறங்குவதால் அருகில் சத்தமோ எதிரிகளோ நெருங்கினால் கிட்ட வரும் வரை அசைவின்றி இருக்கும் பக்கி திடீரெனப் பறந்து செல்லும்.  



கிளையில் நீள வாட்டில் உட்கார்ந்து தூங்கும் பக்கி
http://en.wikipedia.org/wiki/File:Lesser_Nighthawk.jpg

கருப்பு, கரும் பழுப்பு, பழுப்பு, வெளிர் பழுப்பு, வெள்ளை ஆகிய நிறங்கள் கொண்ட இதன் சிரகுகள் இது வாழும் சுற்றுப் புரத்தோடு ஒன்றி விடுவதால் இதனைக் கண்டு பிடிப்பது மிகக் கடினம்.  தனது மாய்மாலத்தில் கொள்ளை நம்பிக்கை பக்கிக்கு. அதனால் தான் கிட்ட நெருங்கும் வரை பறப்பதில்லை.

அடுத்த பக்கத்தில் உள்ள புகைப் படத்தினை நான் எடுக்கச் சென்ற போது குஞ்சு தனது இறக்கைகளை பட படவென அடித்தது, அம்மா....அம்மா.... எழுந்திரு.  யாரோ நம்மை நோக்கி வருகிறார் என்பது போல.  ஆனால் தாய்ப் பறவையோ, கவலைப்  படாதே. நாம் இருப்பது யாருக்கும் தெரியாது என்பது போல் அலட்டிக் கொள்ளாமல் இருந்தது.  கிட்ட நெருங்கிப் படம் எடுத்துக் கொண்டிருக்கையில் எனது காலடியில் இருந்த ஒரு சிறு கல் உருண்டு பக்கியின் அருகே ஓட அது திடீரெனப் பறந்தது.  


குஞ்சின் மீது தலை வைத்துப் படுத்துறங்கும் பக்கி
(கருப்பு   வெள்ளை படம் எடுத்தது நடராஜன் கல்பட்டு)

படுத்து உறங்கும் போது கவிழ்த்துப் போடப்பட்ட பாதுகை எனக் காணப் படுவதால் இதன் பெயர் பாதுகைக் குருவி என வந்திருக்க வேண்டும். 


நைட்ஜார் என்ற பெயர் ஒருகாரணப் பெயராகத்தான் இருக்க வேண்டும்.  ஏனெனில் இது இரவில் எழுப்பும் ஒலியான சக்...சக்...சக்...சர்ர்ர்…” என்பது காதுக்கு நாராசமாக (jarring sound) இருக்கும்.

இரவு நேரங்களில் விட்டில் பூச்சிகளைத் தேடி ஆட்டுத் தொழுவங்களில் பறப்பதால் மேலை நாட்டவர் இப்பறவை ஆடுகளின் பாலை உரிஞ்சிக் குடிக்க வருவதாக எண்ணி இதற்கு ஆட்டுப் பால் உரிஞ்சி (Goat sucker) என்று பெயர் சூட்டினர்.

பக்கி பற்றிய ஒரு விசேஷத் தகவல் இதோ.

மண்ணை மண்வெட்டியால்  வெட்டும்போது சில சமயம் மண்ணுக்கடியில் சில மாதங்களாகத் தூங்கிக் கொண்டு இருக்கும் தவளையைக் காணமுடியும்.  அதே போல வட அமெரிக்காவில் வாழும் பக்கிகள் குளிர் நாட்களில் சுமார் மூன்று மாதங்கள் ஒரு வித சலனமும் இன்றி சிறு பள்ளங்களில் தூங்குமாம்.  அப்பொது அவற்றின் எடையில் 28 கிராம் கொழுப்பு மட்டுமே குறையுமாம்.
நம் நாட்டில் காணப் படும் பக்கிகளுக்கு இத் தூக்கம் தேவை இல்லை.


இயறையின் எழிலில் தான் எத்தனை இன்பக் காட்சிகளை அளிக்கிறாய் இறைவா !

                                      நடராஜன் கல்பட்டு
         

Wednesday, 26 December 2012


இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (13) இருவாட்சி
பறவைகளில் நாம் தையல்காரர், நெசவாளர், பாடகர், தச்சர்   இவர்களைப் பார்த்தோம்.  ஒரு கட்டிடத் தொழிலாளியைப் பார்க்க வேண்டாமா?

இருவாட்சி, மலை இருவாட்சி, செண்டு என்ற சொற்கள் மலர்களைப் பற்றிப் பேசும்போது  வரும் வார்த்தைகள்.  இச் சொற்களையே தன் பெயராகக் கொண்ட ஒரு வினோதப் பறவையும் உண்டு.  அதுதான் ஆங்கிலத்தில் ஹார்ன்பில் (Hornbill) என்றழைக்கப் படும் பறவை.  நம் நாட்டில், ரெட்டைச் செண்டு அல்லது சின்ன இருவாட்சி (Grey Hornbill) என்ற ஒரு பறவையும், மலை இருவாட்சி (The Great Indian or Malabar Hornbill) என்னும் பறவையயும் சுமார் ரெண்டாயிரம் அடிகளுக்கு மேல் உயர்ந்த பிரதேசங்களில் மரங்களில் வசிப்பதைக் காணலாம்.

பெயருக்கு ஏற்றாற்போல் இவற்றின் மேல் அலகு கொம்பு முளைத்தது போன்று இருக்கும்.  இந்த உருப்பின் உபயோகம் என்ன தெரியுமா ?

இருவாட்சி மரப் பொந்துகளில் தனது கூட்டினை அமைக்கும்.  முட்டைகள் இட்டபின் அவற்றினை அடை காக்கப் பெண் பறவை கூட்டினுள் உட்கார்ந்து கொண்டு, தனது எச்சத்தைக் கொண்டு பொந்தின் துவாரத்தினை தனது கொம்பு முளைத்த அலகினை கட்டிடத் தொழிலாளியின் கையில் உள்ள கொலுறு போன்று உபயோகித்து காரை பூசியதுபோல் அடைத்துவிடும்.  பின் அதில் ஒரு சிறு துவாரம் செய்து விடும்.  அடுத்த பதினைந்து இருபது நாட்களுக்கு மனைவிக்கு உணவு கொண்டு வந்து ஊட்டிவிட வேண்டியது கணவனின் பொறுப்பு.  இந்த வேலையைச் செய்ய வேண்டி இருப்பதால் ஆண் பறவை தான் உண்ண நேரமின்றி இளைத்துத் துரும்பாகிவிடும்.  பெண் பறவையோ உட்கார்ந்த இடத்திலேயே உண்டு உறங்குவதால் கொழுத்துவிடும்.

முட்டையிலிருந்து குஞ்சுகள் வந்தபின், தாய்ப் பறவை பூசிய காரையினை உடைத்துக் கொண்டு வெளியே வந்து மீண்டும்  முன் போலவே பூசிவிட்டு, தாய் தந்தை இருவருமாக குஞ்சுகளுக்கு இரை கொண்டு வந்து கொடுக்கும். இப்பறவைகளின் உணவு ஆல், அரசு, அத்தி போன்ற மரங்களின் பழங்கள்.

இனி பாருங்கள் இருவாட்சியின் இரு காட்சிகளை.

இரெட்டைச்செண்டுக் குருவி அல்லது சின்ன இருவாட்சி
(Grey hornbill)
(http://en.wikipedia.org/wiki/Image:Indian_Grey_Hornbill_I_IMG_4051.jpg)
                               

மலை இருவாட்சி (The Malabar Great Indian Hornbill)
(http://en.wikipedia.org/wiki/Image:Doppelhornvogel-09.jpg)

இயற்கையின் எழிலினைக்கூட்ட எப்படியெல்லாம் படைப்புகளைத் தந்துள்ளான் இறைவன் ! நாம் கண்டு ரசிக்கும் போது அவற்றைப்  படைத்த ஆண்டவன் நம் கண்களுக்குத் தெரியாமலா போவான் ?

                                      நடராஜன் கல்பட்டு