Thursday 13 December, 2012


இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (8) வானம்பாடி


                                          வானம்பாடியும் குஞ்சுகளும்

இசைக் குயிலைப் பற்றிப் பார்த்தோம்.  பாடகரைப் பார்க்க வேண்டாமோ ?

ஒரு நெல் வயலில் வானம்பாடி ஒன்று கூடு கட்டி குஞ்சு பொரித்திருந்தது.  ஒரு நாள் இரையுடன் திரும்பிய தாய்ப் பறவையிடம் குஞ்சுகள், அம்மா, அம்மா இன்று இருவர் வந்திருந்தனர்.  ஒருவர் சொன்னர் நெல் கதிர்கள் நன்றாக முற்றி விட்டன.  வெளி ஊரில் உள்ள நம் சொந்தக் காரர்களுக்கு சேதி அனுப்பி அவர்கள் வந்ததும் அறுவடை செய்ய வேண்டும் என்று.  எங்களுக்கு பயமா இருக்கம்மா.  வேறெ எங்கயாவது போயிடலாம்மா என்றன.

தாய்ப் பறவை சொல்லிற்று, கவலைப் படாதீங்க.  மறுபடி அவங்க வந்து பேசினா கவனமாக் கேட்டு எங்கிட்டெ சொல்லுங்க என்ன பேசிகிட்டாங்கன்னு.  சரிம்மா என்றன குஞ்சுகள்.

இரண்டு நாட்களுக்குப் பின் ஒரு குஞ்சு சொல்லிற்று, அம்மா, அம்மா இன்னெக்கி மறுபடி அந்த ஆளுங்க வந்து பேசிக்கிட்டாங்க சொந்தக் காரங்க வரதாக் காணும்.  கூலி ஆளுங்களுக்கு சொல்லி அனுப்பலாம்னு.  அம்மா ரொம்ப பயமா இருக்கும்மா.  ஆளுங்க வந்து எங்களெ மிதிச்சுட்டா நாங்க செத்துப் போயிடுவோமேம்மா.    

தாய், கவலைப் படாதீங்க.  மறுபடி வந்தா என்ன பேசினாங்கன்னு கவனமா கேட்டு சொல்லுங்க, என்றது.

மறு நாள் மாலை, அம்மா, அம்மா இன்னெக்கி அவர் சொல்லிட்டு இருந்தார், ஆளுங்க வர்ரதாக் காணும்.  நாளெக்கி நாமே வந்து அறுவடை செஞ்சிடலாம்னு,  என்றது ஒரு குஞ்சு.  இதைக் கேட்ட தாய்ப்பறவை, இப்போ நாம வேறெ எடத்துக்குக் கெளம்ப வேண்டியதுதான் என்று சொல்லி ஒவ்வொரு குஞ்சாக வாயில் கவ்விச்சென்று பாதுகாப்பான இடத்திற்கு குஞ்சுகளை மாற்றியது.

இந்தக் கதையில் நமக்கு இரண்டு விஷயங்கள் தெரிய வருகின்றன.  ஒன்று தன் கையே தனக்குதவி என்பது.  மற்றொன்று வானம்பாடி தரையில் கூடு கட்டும் என்பது.

தரிசல் நிலங்கள், ஆற்றுப் படுகைகள்,வயல் வெளிகள் இவற்றில் ஈர மண்ணில் மாட்டுக் குள்ம்பினால் ஏற்பட்ட குழி அல்லது இயற்கையிலேயே உள்ள சிறிய பள்ளம் இவற்றில் காய்ந்த வேர் இலை சரகுகளைக் கொண்டு கிண்ணம் போன்ற தனது கூட்டினை அமைக்கும் வானம்பாடி.  ஆமாம், இது பாடுவது எப்போது ?

சாதாரணமாக பிப்ரவரி முதல் ஜுலை வரையிலான நாட்களில் ஆண் வானம்பாடி தான் உட்கார்ந்திருக்கும் கல்லிலிருந்தோ அல்லது செடியிலிருந்தோ செங்குத்தாக மேலே பறந்து கண்ணுக் கெட்டாத தூரத்தை அடையும்.  பின் தன் இறக்கைகளை மெதுவாக அடித்துக் கொண்டு ஒரே இடத்தில் இருந்தபடி தன் அழகான குரலில் சிறிது நேரம் இசை எழுப்பும்.  அவ்வாறு இசை எழுப்புவது சில சமயம் ஐந்து நிமிஷங்களுக்குக் கூட நிகழும்.  பின் தன் இறக்கைகளை மடித்துக் கொண்டு ஒரு கல் விழுவது போல செங்குத்தாக கீழே பல மீடர் தூரம் இறங்கி தன் இறக்கை களை விரித்துக் கொண்டு மீண்டும் சிறிது நேரம் இசை எழுப்பும்.  இவ்வாறு இரண்டு மூன்று மட்டங்களில் பாடி முடித்தபின் வானம்பாடி முன்பு உட்கார்ந்து இருந்த இடத்தினை வந்தடையும்.



இந்த இசைக் கச்சேரி வாழ்க்கைத் துணை கிடைக்கும் வரை தொடரும்.
இப்படி வானத்தில் இசை எழுப்பி துணை தேடுவதை ஒரு ஆண்
குருவி மட்டடுமின்றி பல ஆண் குருவிகள் போட்டி போட்டுக் கொண்டு செய்வதும் உண்டு.

முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவந்தபின், தாய் தந்தை ஆகிய இரு பறவைகளுமே அவற்றுக்கு உணவளிப்பதில் பங்கேற்கும்.

ந்ம் நாட்டில் கணப்படும் வானம்பாடிகளில், மூன்று முக்கிய வகைகள் உண்டு.  அவை கொண்டைகொண்ட வானம்பாடி (Crested lark),   ஆகாசத்து வானம்பாடி (Skylark), சாம்பல் தலை வானம் பாடி (Ashy crowned finch lark) என்பவையாகும். 

  

             கொண்டை கொண்ட  வானம்பாடி                               
                (Crested lark)  

(http://birdblog.merseyblogs.co.uk/CRESTED%20LARK.jpg) 

     
                   ஆகாசத்து வானம்பாடி (Skylark)
                     (http://en.wikipedia.org/wiki/Image:Alauda_arvensis_2.jpg)




              சாம்பல் தலை வானம்பாடி (Ashy crowned finch lark)


இயற்கையின்  எழிலை  நாம்  காணும்போது  நமக்கு எவ்வளவு
இன்பம் அளிக்கிறான் இறைவன் !  அளிக்கிறான் என்னும்போது இருக்கிறான் என்பது தெரியாமலா போகும்?

(படங்கள் 1ம் 5ம் எடுத்தது நடராஜன் கல்பட்டு.  மற்ற மூன்றும் இணையத்தில் இருந்து)


                                      நடராஜன் கல்பட்டு


                 (கருப்பு வெள்ளை படங்கள் எடுத்தது நடராஜன் கல்பட்டு)



                                                             

1 comment:

  1. ம்ம்ம் .. இதை நான் முன்னவே படித்துவிட்டேன், இருந்தாலும் மீண்டும் படிக்க வாய்ப்பு கிடைத்துவிட்டது. நன்றி ஐயா.

    ReplyDelete