Saturday 1 June, 2013

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (30) இசை பாடும் பறவைகள் (2) மலை மைனா

மதுரமான இசை பாடும் பறவைகளில் ஒன்று மலை மைனா. சதாரணமாக நாம் பார்க்கும் மைனாவைப் போன்றே இருக்கும் இப்பறவையின் வால் சற்று குட்டையானது.


Photograph by Yethin S.K.

ஆங்கிலத்தில் இப்பறவையை கிரேகிள் (Grackle) என்றழைப்பார்கள்.  விஞ்ஞான ரீதியாக இப்பறவைக்கு அளிக்கப் பட்ட பெயர் கிரேகுலா ரிலிஜியோஸா (Gracula riligiosa) என்பதாகும்.

மலை மைனாவை மேற்குத் தொடர்ச்சி மலை, இமயமலை அடிவாரம், மத்யப் பிரதேசம், மஹாராஷ்ட்ரா போன்ற இடங்களில், சுமார் 2500 முதல் 5000 அடி வரையிலான இடங்களில் உயர்ந்த மரங்கள் அடர்ந்த காடுகளில் காணலாம்.  த்மிழ் நாட்டில் பழனி மற்றும் கேரளாவின் முதுமலையிலும் காணலாம்

காட்டின் நிசப்த்தத்தைக் கிழித்துக்கொண்டு கணீரென ஒரு பறவையின் குரல் கேட்டால் அது மலை மைனாவின் குரல்தான் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.  பழனி மலைக்கும், தேக்கடிக்கும் சென்றவர்கள் மலை மைனாவைப் பார்க்காமலோ அதன் தேமதுரக் குரலைக் கேட்காமலோ இருந்திருக்க முடியாது.

மலை மைனாக்கள் விரும்பி உண்பது ஆல், அத்தி போன்ற மரங்களின் பழங்கள், தேன் மற்றும் புழு, பூச்சிகள்.

மலை மைனாக்கள் இனப் பெருக்க காலத்தில் ஜோடிகளாக வாழ்ந்தாலும் மற்ற நாட்களில் சுமார் இருபது பறவைகள் வரை கொண்ட கூட்டமாக வாழும்.


மூன்று நான்கு கிலோமீடரிலான துரம் வரை உள்ள மலை மைனாக்கள் தங்களுக்குள் மூன்று முதல் பதிமூன்று வகையான இசை வடிவங்களில் பேசிக்கொள்ளுமாம்.  அங்கிருந்து சற்றே தூரம் சென்றால் அங்குள்ள காட்டு மைனாக்கள் அதே பாஷையில் பேசிக்கொள்ளுமா என்பது நிச்சயமில்லையாம்.  மலை மைனா இந்த விஷயத்தில் நம்மைப் போலவே இருக்கிறது இல்லையா?  மாவட்டத்திற்கு மாவட்டம் ஒரே மொழி பேசினாலும் பேசும் விதத்தில் வித்தியாசம், மாகாணத்திற்கு மாகாணம் ஒரு மொழி, உலகத்தில் உள்ள பல தேசங்களிலும் பல மொழிகள் என உள்ளது போலவே இந்தப் பறவைகள் பாடும் இசையிலும் இடத்திற்கு இடம் வித்தியாசம்!    

பல குரலில் பாடவல்ல மலை மைனா, காட்டில் வாழும்போது மற்ற பறவைகளின் குரலில் பேசுவதில்லை.  ஆனால் அதே மலை மைனாவைப் பிடித்து வீட்டில் வளர்க்கும் போதோ அவை கேட்கும் குரல்களில் எல்லாம் பேச வல்லது.

மனிதக் குரலை உலகிலேயே மிக நெருக்கமாகத் திருப்பித் தரவல்ல பறவை என்ற பட்டத்தினையும், கூண்டிலடைத்து வைத்தாலும் சற்றும் மனம் தளராத பறவை என்ற பெயரையும் கொண்ட மலை மைனாவிற்கு இதன் இவ்விரு திறமைகளே எதிரி.

மலை மைனாக் குஞ்சுகளை மேற்சொன்ன திறமைகளுக்காக அதிக அளவில் பிடித்து வியாபாரம் செய்வதால் இவற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது. 

நம் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் பலர் மூங்கிலைப் பிளந்து செயற்கையாக கூடு  போலத் தயாரித்து மலை மைனாக்களை அவற்றில் முட்டை இட்டுக்குக் குஞ்சு பொரிக்கச் செய்து அக் குஞ்சுகளைப் பிடித்து விற்று விடுகின்றனர்.  என்ன கொடுமை!  சிறகு கொண்ட பறவையினைப் பறக்க விடாமல் சிறையில் அடைத்துதான் அதன் இசை கேட்க வேண்டுமா?

சுதந்திரமாகப் பறந்து திரிந்து தேன் என இசை எழுப்பும் இப் பறவைகளைப் பிடித்து கூண்டில் அடைத்து அதனால் அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்காமல், அவை பரப்பும் இசை வெள்ளத்தினைப் பருகுவோமானால் அவற்றைப் படைத்த இறைவனை நாம் நிச்சய்ம் காண்போம்.


                                            நடராஜன் கல்பட்டு  

1 comment:

  1. மனித குரலை மிக நெருக்கமாக திருப்பி தரவல்ல பறவை கிளி என்று தான் நினைத்திருந்தேன். இது ஒரு நல்ல தகவல்.
    இதை கூர்க் (coorg) சென்றபோது, காட்டில் பார்த்திருக்கிறேன். மிக அழகான பறவை.

    ராம்.

    ReplyDelete