Sunday 3 March, 2013


இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (23) பறவைகள் வலசை போதல் அல்லது பருவ கால இடப் பெயர்ச்சி செய்தல்

இயற்கையின் வினோதங்களில் மிகப் பெரிய வினோதம் பறவை வலசை போதல் அல்லது வருடா வருடம் ஒரு பருவ காலத்தில் இடம் பெயர்ந்து வாழ்தல் (Bird migration). 

இடம் பெயர்வது ஒன்றோ இரண்டோ அல்ல.  வித விதமான பறவைகள் கோடிக் கணக்கான எண்ணிக்கையில்.  அவ்வாறு இடம் பெயர்வதற்காக பறவைகள் பறக்கும் தூரம் சில நூறு மைல்களில் இருந்து பல ஆயிரக் கணக்கான மைல்கள் வரை.

வலசை போகும் பாதையில் பறவைகள் இளைப்பாருதல்

வலசை போதல் நாம் ஒரே ஊரில் அல்லது ஒரே நாட்டில் வீடு மாறுவது போல் அல்ல.  வட துருவப் பிரதேசங்களில் இருந்து தென் துருவப் பிரதேசம் வரை இட மாற்றம் செய்கின்றன பல பறவைகள், சுமார் 10,000 மைல்களிலிருந்து 14,000 மைல்கள் தூரத்திற்கு.  அது அந்தப் பறவைகளால் கடும் குளிரினைத் தாங்க முடியாமல் அல்ல.  போதுமான அளவு உணவு கிடைக்காததால் என்பது தெரிய வந்துள்ளது.

பறவைகள் இடம் பெயர்தல் குறித்து பல ஆராய்ச்சிகள் நடத்தப் பட்டுள்ளன.  நடந்துகொண்டு இருக்கின்றன.  அவற்றால் பல வியக்கத் தக்க உண்மைகள் கண்டு அறியப் பட்டுள்ளன.  இந்த ஆராய்ச்சிக்கு உதவி புரிவது பறவைகளுக்கு வளயம் அல்லது காப்புப் போடுதல் என்ற நடவடிக்கை ஆகும்.  (Bird ringing or banding)

இன்டர்நேஷனல் யூனியன் ஃபார் கன்சர்வேஷன் ஆஃப் நேசர், அமெரிக்காவில் உள்ள ஆடுபான் சொசைடி, அமெரிகன் ஜியலாஜிகல் சொசைடியின் விஞ்ஞான கேந்திரங்கள், இந்தியாவில் உள்ள பாம்பே நேசுரல் ஹிஸ்டரி சொசைடி மற்றும் உலகில் பல நாடுகளிலும் உள்ள இயற்கையில் ஈடுபாடு கொண்ட சங்கங்களும், பல்கலைக் கழகங்களும், தனி நபர்களும் பறவைகளைப் பிடித்து அதன் காலிலோ இறக்கையிலோ அலுமினியம் அல்லது ப்ளாஸ்டிக்கினால் ஆன காப்பினைமாட்டி விடுவர்.  அந்தக் காப்பில் ஒரு எண்ணும் காப்பினை மாட்டியவரின் விலாசமோ டெலிஃபோன் எண்ணோ இருக்கும்.

பிடித்த பறவையின் காலில் போடப்படும் வளையம்

சிறு பறவைகளைக் காப்பிடுவதற்காகப் பிடிப்பதற்கு பனி வலை எனப்படும் மிக மெல்லிய தான நைலான் நூலினால் பின்னப் பட்ட வலையினை உபயோகிப்பார்கள்.

(பனி வலை)

பெரிய பறவைகளை வேறு விதங்களில் பிடிப்பார்கள்.  இப்படிப் பிடிக்கும் போது ஏற்கெனவே ஒரு பறவைக்குக் காப்பிருந்தால் அதில் உள்ள எண் மற்றும் தகவல்களை குறித்துக் கொண்டு பிடிக்கப் பட்ட இடம், தேதி,  பிடிபட்டபோது அதன் எடை போன்றவற்றை முதலில் காப்பிட்டவருக்குத் தெரிவிப்பார்கள்.  இத்தகவல் பரிமாற்றம் பிடிபட்ட பறவையின் வயது, அது பறந்து சென்றுள்ள தூரம் போன்ற பல உண்மைகளைத் தெரிந்துகொள்ள உதவுகிறது.

சமீப காலத்தில் பறவைகளின் உடலில் மிக நுண்ணிய மின் அலை பரப்பியினைப் பொருத்தி அதிலிருந்து எழும் அலைகளை தரையில் உள்ள மின் அலை வாங்கி நிலயங்களின் மூலமோ அல்லது செயற்கைக் கோள்களின் மூலமோ கிடைக்கப் பெற்று அந்தப் பறவை உள்ள இடம், பறக்கும் உயரம், வேகம் போன்ற தகவல்களைக் கண்டறிகின்றன.

இந்த ஆராய்ச்சிகளினால் பல ஆச்சரியப் படும் படியான விஷ்யங்கள் வெளி வந்துள்ளன.


சில வியக்கத் தக்க உண்மைகள் உங்களுக்காக இதோ:


1.  தூரம்:

உலகிலேயே அதிக தூரம் பறந்து வலசை போகும் பறவை ஆர்டிக் கடல் ஆலா (Arctic Tern).  இது கடற்கரை ஓரமாகவே பறந்து செல்லும், சுமார் 12,000 மைல்கள் (19,000 கிலோ மீடர்) தூரம் (ஒரு வழி).  போகும் வழியில் உணவு (மீன்கள்) உண்ணவும் மற்றும்  இளைப்பாருவதற்கும் வசதி வேண்டுமல்லவா?  அதனால்தான் கடற்கரை ஓரப் பயணம்.

 ஆர்டிக் ஆலா ஜோடி 


 ஆர்டிக் ஆலா வலசை போகும் பாதையும் வாழும் இடங்களும்.

சிவப்பு :  இனப் பெருக்கம் செய்யும்போது வாழும் இடங்கள்.
கடல் பச்சை :  இடம் பெயர்ந்து வாழும் நாட்களில் தங்கும் இடங்கள்.
பச்சை அம்புக்குறிகள் :  இடம் பெயர்வதற்காப் பறந்து செல்லும் பாதை.  சுமார் 12,000 மைல்கள் (19,000 கிலோமீடர்கள்) ஒரு வழிபறப்பது நிலப் பரப்புக்கு மேலாக அல்ல.  கடலுக்கு மேலாகத்தான். காரணம் அதன் உணவு கடல் வாழ் மீன்கள்.

பிறந்து சில நாட்களுக்குள் காப்பு போடப்பட்ட ஒரு ஆர்டிக் ஆலா குஞ்சு பறக்க ஆரம்பித்ததும் இங்கிலாந்தின் கிழக்குக் கரையில் இருந்து கிளம்பி மூன்று மாதத்தில் 14,000 மைல்கள் கடந்து ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னை அடைந்தது என்று சமீபத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

(“ஏண்டா ஆலாப் பறக்கறே என்ற கேள்விக்கும் பல்லாயிரக் கணக்கான மைல்கள் பறந்து வலசை போகும் கடல் ஆலாவுக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ?)

 நம் நாட்டு க்ரௌன்ச பக்ஷி போன்றே ஆர்டிக் கடல் ஆலாவும் ஒரு முறை ஜோடி சேர்ந்தால் அந்த பந்தம் ஆயுள் பூராவும் நீடிக்கும்.

சமீப காலம் வரை வலசை போகும் போது உலகிலேயே அதிக தூரம் சுமார் 3,000 மைல்கள் (4,800 கிலோ மீடர்கள்) ஒரே மூச்சில் நிற்காமல் பறந்து செல்வதற்கான சான்றிதழ் பெற்ற பறவை கல் பொறுக்கி என்று தமிழ் நாட்டில் அழைக்கப் படும் கோல்டன் ப்ளோவர் (Golden Plover) ஆகும். 

கல் பொறுக்கி வட அமெரிக்காவின் வட பகுதி, வட ஐரோப்பா, வடக்கு ஆசியா போன்ற இடங்களில் இனப் பெருக்கம் செய்து பின் கடல் உறையும் குளிர் நாட்கள் வந்தவுடன் தெற்கு நோக்கிப் பறக்கிறது.

     கல்பொருக்கி ஆண் பறவை      கல்பொருக்கி பெண் பறவை

இந்தப் பறவையை தமிழ் நாட்டில் தஞ்சை ஜில்லாவில் உள்ள கோடியக்கரையிலும் (Point Calimere) மற்றும் சுற்றுப் புறங்களிலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் காணலாம்.

இந்தப் பறவைக்கு கல் பொறுக்கி என்ற பெயர் ஏன் வந்தது தெரியுமா?  இது கடற்கரையில் உள்ள சிறு கற்களைத் தள்ளி அதனடியில் கிடைக்கும் புழு பூச்சிகளைத் தின்னும்.

சென்ற ஆண்டு செப்டம்பர் வரை முதல் இடத்தில் இருந்த கல் பொருக்கியை கவிழச் செய்தது மூக்கான் என்று தமிழ் நாட்டில் அழைக்கப் படும் Godwit என்ற பறவை. இந்தப் பறவை சாதித்து                                                                                                                                   இருப்பது என்ன என்று பாருங்கள்.

மூக்கான்

ந்யூசிலாந்தில் வடக்குத் தீவில் உள்ள மிராண்டா என்ற ஊரில் பிப்ரவரி, 2007ல் சிறிய ரேடியோ மின் அலை பரப்பி பொருத்தப் பட்ட சில பறவைகளில் ஒரு பெண் மூக்கானும் இருந்தது. 

E-7 என்று பெயர் கொடுக்கப் பட்ட இதன் போக்கு வரத்து செயற்கைக் கோள் மூலம் கண் காணிக்கப் பட்டது.

     
மிராண்டா, ந்யூசிலாந்து

மூக்கானின் வலசை போகும் பாதை
        
                       
மார்ச் 17ம் தேதி மிராண்டாவிலிருந்து கிளம்பிய மூக்கான் எங்கும் தரையிறங்காமல் 6,300 மைல் தூரத்தில் சீனாவில் உள்ள யாலு ஜியாங் என்ற இடத்தை 8 நாட்களில் அடைந்தது.  5 வார ஓய்வுக்குப் பின் அங்கிருந்து கிளம்பிய மூக்கான் 5 நாட்களில் 4,500 மைல் தூரத்தில் உள்ள மேற்கு அலாஸ்காவின் யூகான்-குஷாக்வின் முகத்துவார பிரதேசத்தை அடைந்தது.  இந்த இடம் தான் அது இனப் பெருக்கம் செய்யும் இடம்.

பின்னர் ஆகஸ்ட் 29ம் தேதி கிளம்பி வேறு பாதயில் 7,200 மைல் தூரம் ஒரே மூச்சில் பறந்து எட்டரை நாட்களில் ந்யூசிலாந்தின் மிராண்டாவை மீண்டும் அடைந்தது.

மூக்கான்களை கோடியக்கரையிலும் நவம்பர் முதல் பிப்ரவரி வரை காணமுடியும்.

2.  உயரம்:

வலசை போகும்போது பறவைகள் பறக்கும் தூரம் பற்றிப் பார்த்தோம்.  உயரம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டாமா?
நாம் பயணம் செய்யும் ஜெட் விமானங்கள் பறப்பது சுமார் 28,000 அடியிலிருந்து 35,000 அடி உயரம் வரை.

தலையில் கோடுகள் கொண்ட வாத்து (Bar headed goose) பறப்பது 30,000 33,850 அடிகள் உயரத்தில்.  லடாக், திபெத் போன்ற பிரதேசங்களில் உள்ள ஏரிகள் அருகே இனப் பெருக்கம் செய்து வாழும் இப் பறவைகள் குளிர் நாட்களில் இமயம் தாண்டி இந்தியா வருகின்றன.



தமிழ் நாட்டில் தலையில் கோடுகள் கொண்ட பெரிய வாத்தினை திருச்சி மாவட்டத்தில் உள்ள தேவரயனேரியிலும், தஞ்சை மாவட்டம் கோடடியக்கரையிலும், வேறு பல பறவை சரணாலயங்களிலும் காணலாம்.

கடல் பறவைகளும் கடற்கரை வாழ் பறவைகளும் பறப்பது 20,000 முதல் 25,000 அடி வரையிலான உயரத்தில்.

சிறிய இசை பாடும் பறவைகள் பறக்கும் உயரம் 500 முதல் 5,000 அடி உயரம் வரை.

3.  வேகம்:

வலசை போகும் பறவைகள் பறக்கும் வேகம் சுமார் மணிக்கு 20 மைல்களிலிருந்து 40 வரை.  ஊலகிலேயே அதிக தூரம் ஒரே மூச்சில் பறந்து சாதனை செய்துள்ள மூக்கனின் வேகம் மணிக்கு 36 மைல்கள் அதாவது மணிக்கு 58 கிலோ மீடர்கள்.  பெரிய பறவைகளின் வேகம் குறைவு.

4.  பறக்கும் நேரம்

வலசை போகும் பறவைகளில் அதிக பட்சம் இரவில் பறப்பவை.  ஒரே மூச்சில் பறக்கும் பறவைகள் பகல் இரவு இரு நேரத்திலும் பறக்கும்.

5.  பறக்கத் தேவையான சக்தி:

விமானம் பறக்க வேண்டுமானால் அதற்கு எரிபொருள் தேவை.  அதே போல் ஒரு பறவை பறக்க வேண்டுமானால் அதற்கும் எரிபொருள் தேவை.  அதிக தூரம் பறக்க வேண்டி இருக்கும் வலசை போகும் பறவைகள் இடம் பெயரும் முன் தனது எடை எவ்வளவோ அதில் பாதி அளவுக்கு கொழுப்பை தன் உடம்பில் தோலின் கீழ் சேகரித்துக் கொள்ளும்.  உதாரணத்திற்கு சுமார் 200 கிராம் எடையுள்ள கல்பொருக்கி தனது 4,800 கிலோ மீடர் பயணத்தைத் தொடங்கும் முன் தன் உடலில் 100 கிராம் கொழுப்பைச் சேமித்துக் கொள்கிறது.

எண்ணிப் பாருங்கள் மனிதனால் ஆக்கப் பட்ட எந்த ஒரு பொருளாவது 100 கிராம் எரிபொருளை வைத்துக் கொண்டு 4,800 கிலோ மீடர் தூரம் பறந்து செல்ல முடியுமா என்று.

(ஒரே மூச்சில் 7,200 மைல்கள் பறக்கும் மூக்கானால் எட்டரை நாட்கள் பட்டினி கிடக்க முடிகிறது.  வேண்டும்போது தன் உடல் எடையை ஒன்றரை மடங்காக்கிக் கொள்ள முடிகிறது.  நம்மால் முடியுமாஅவ்வையார் வார்த்தைகளை எண்ணிப் பாருங்கள்:

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் ஒரு நாளும்
என் நோவறியாய் இடும்பைகூர் என் வயிரே
உன்னோடு வாழ்தல் அரிது

பறவைகள் எங்கே?  நாம் எங்கே?)

6.  திசை மற்றும் வழி காணுதல்:

ஒரு விமானம் சேரவேண்டிய இடத்திற்கு ஒழுங்காகப் போய்ச்சேர வேண்டுமானால் விமானம் நல்ல நிலயில் இருக்க வேண்டும்.  விமான ஓட்டிக்கு அந்த விமானத்தை நல்ல முறையில் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.  விமானத்தில் திசை, போக வேண்டிய பாதை மற்றும் போக வேண்டிய பாதையில் விமானம் அந்த நொடியில் இருக்கும் இடத்தைக் காட்டும் கருவி, அந்த நொடியில் பறக்கும் உயரம் காட்டும் கருவி, வேகத்தினைக் காட்டும் கருவி இவை அனைத்தும் இருக்க வேண்டும்.  தரையிலிருந்து விமானத்தைக் கண்காணிக்கும் நிலயங்களில் விமானம் பறந்து கொண்டிருக்கும் இடத்தைக் காட்டும் கருவிகள் மற்றும் விமான ஓட்டியுடன் தொடர்பு கொள்ளத் தொலைபேசித் தொடர்புக் கருவிகள் இருக்க வேண்டும்.

மேற்சொன்னவை எல்லாம் பறவைகளிடம் இருக்கின்றனவா?
பின் எப்படி அவை வழி தப்பாமல் வருடா வருடம் சேர வேண்டிய இடங்களுக்கு ஒழுங்காகப் போய்ச்சேருகின்றன?

இந்தக் கேள்விக்கு ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து பல கால கட்டத்திலும் பல விதமான பதில்கள் வந்துள்ளன.

முதல் முதலாக பறவைகளின் மனத் திறையில் கீழே தரையில் காணப்படும் சில முக்கிய இடங்களின் படம் பதிவாகி விடுகிறது.
அந்த ஞாபகத்தில் பறவைகள் வழி தப்பாது வருடா வருடம் பறக்கின்றன என்று சொல்லப் பட்டு வந்தது.  அப்படி என்றால் முதல் முதலாகப் பறந்து செல்லும் குஞ்சுளுக்கு வழி எப்படித் தெரிகிறது என்ற கேள்விக்கு பதில் இல்லை.

சூரியனைப் பார்த்து வழி கண்டன பறவைகள் என்றனர் சிலர்.
அப்படியெனின் மேகம் அடர்ந்த மழை நாட்களில் எவ்வாறு வழி கண்டன, இரவில் பறக்கும் பறவைகள் எவ்வாறு வழி கண்டன?

இரவில் பறக்கும் பறவைகள் சந்திரனைப் பார்த்து தன் பாதை அறிகிறது என்றனர் சிலர்.  அப்படியென்றால் அமாவாசையன்று
பறவைகள் விடுமுறை எடுத்துக் கொள்கின்றனவா என்றால் இல்லயே.

நக்ஷத்திரங்களைப் பார்த்து வழி அறிகின்றன என்கிறார்கள் சில ஆர்ராய்ச்சியாளர்கள்.  அப்படியெனில் பறவைகள் யாரிடம் வான சாஸ்திரம் கற்றுக் கொண்டு வல்லுனர்கள் ஆயின?

வான சாஸ்திர வல்லுனர்களோ இல்லையோ பறவைகள் கட்டாயம் வானிலை பற்றி முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் சக்தி படைத்தவை என்று தோன்றுகிறது.  இல்லை என்றால்
அவை வலசை போகும் வழியில் புயலோ கடும் மழையோ வந்தால் அவை முற்றிலுமாக அழிந்து விடும்.   போகும் வழியில் அபாயம் இல்லை என்று தெரிந்த பின்னரே அவை தங்களது பயணத்தைத் தொடங்க வேண்டும்.  தொடங்குகின்றன.

புவியின் காந்த சக்தியை உணர்வதன் மூலம் வழி அறிகின்றன பறவைகள் என்கின்றனர் சிலர்.  அது உண்மை எனின் மாலுமிகளிடம் உள்ள புவியின் காந்த சக்தியால் இயங்கும் மேரினர்ஸ் காம்பஸ் என்ற கருவி என்ன காட்டுகிறது?
எட்டு திசைகளைத் தானே?  இடங்களை அல்லவே.

7.  பறக்கும் விதம்:
இனப் பெருக்க காலத்தில் ஜோடி ஜோடியாக வாழ்ந்த பறவைகள்
வலசை போகும் காலம் நெருங்கும்போது இன வாரியாக கூட்டம் கூட்டமாக சேர ஆரம்பிக்கும்.சரியான சமயம் வந்ததும் அவை போக வேண்டிய இடம் நோக்கிப் பறக்கும்.  அப்படிப்
பறக்கும் முறையில் ஒரு ஒழுங்கு இருக்கும்.  பெரிய பறவைகள் போர் விமானங்களோ, அல்லது விமானக் கண்காட்சிகளில் பறக்கும் விமானங்களோ போல ஆங்கில வி எழுத்தைக் கவிழ்த்துப் போட்டாற்போல் பறக்கும், ஒரு பறவை முன்னே செல்ல மற்றவை அதன் பின்னே.
                                                                                                                                           

 முன்று வித பெரு வாத்துக்கள் வலசை போகும் காட்சியினைப் பாருங்கள்.   (Greater White-fronted, Snow, and Canada Geese migrate in spectacular formation)

ஒரே பறவையே எப்போதும் முன் செல்லும் என்பதல்ல.  கொஞ்ச தூரம் பறந்தபின் அதன் பொறுப்பை பின்னால் வரும் ஒரு பறவை ஏற்றுக்   கொள்ளும்.  இது தற்செயலாக நடக்கும் ஒரு விஷயம் அல்ல.  ஒரு காரணமாகத்தான் என்பது சமீப கால ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.  முன்னால் பறக்கும் பறவையின் இறக்கைகளின் அசைவுகளினால் ஏற்படும் காற்று அலை அதிர்வுகள் பின்னால் வரும் பறவைகளுக்கு பறக்கத் தேவையான எரிபொருள் அளவில் சிக்கனம் அளிக்கிறதாம்.  ஒரே பறவை தலமை தாங்கிச் சென்றால் அது தளர்ந்து விடும்.  அப்படி நடக்காமல் இருப்பதற்காகத் தான் இட மாற்றம்.  என்ன விந்தை !!!

8.  நடுவான் விபத்து!

பல திறமை மிக்க கருவிகள் கொண்ட விமானங்கள் அவ்வப் போது நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாவதைப் பற்றிப் படிக்கிறோம், பார்க்கிறோம்.

அதிருஷ்ட வசமாக விபத்திலிருந்து தப்பிய விமானங்கள்

கோடியக்கரை போன்ற பறவைகள் சரணாலயத்திற்குச் சென்றவர்கள் பார்த்திருப்பீர்கள் கொசு உள்ளான் (Sand Piper)  போன்ற சிறிய இடம் பெயர்ந்து வரும் பறவைகளை.  இவை ஆயிரக் கணக்கில் சதுப்பு நிலத்தில் இரை தேடிக் கொண்டு இருக்கும்.  திடீரென ஒரு பறவை வானில் எழும்.  அதைத் தொடர்ந்து அத்தனை பறவைகளும் பறக்கும்.  சற்றே தூரம் சென்ற தலைவன் திடீரெனத் திரும்ப அத்தனை பறவைகளும் அடுத்த நொடியே திரும்பும்.  ஆனால் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்வதில்லை. இது எப்படி சாத்தியமாகிறது?

விமானத்தைப் படைத்தவர் ஒருவர்.  ஓட்டுபவர் ஒருவர்.  வழி காட்டுபவர் ஒருவர்.  ஆனால் பறவைகளின் விஷயத்திலோ விமானமும் அவரே.  படைத்தவரும் அவரே.  ஓட்டுபவரும் அவரே.  வழி காட்டுபவரும்  அவரே.


அன்பர்களே,

இயற்கையின் எழிலில் இறைவனைக் கண்டீர்களா?  நான் கண்டேன்.  நீங்களும் காண்பீர்கள் நிச்சயமாக.  முயற்சி செய்யுங்கள்.  முயற்சி திருவினை ஆக்கும்.

சும்மாவா பாடினான் பாரதி அன்று,

       காக்கைச் சிறகினிலே நந்த லாலா
        உந்தன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
        பார்க்கும் மரங்கள் எல்லாம் நின்றன்
        பச்சை நிறம் தோன்றுதையே நந்த லாலா” 
என்று?                                     


(வண்ணப் படங்கள் விக்கிபீடியா இணய தளத்திலிருந்து)


                                         நடராஜன் கல்பட்டு


  

1 comment:

  1. அருமையான பதிவு. மிகவும் வியக்கத்தக்க விஷயங்கள்! நிச்சயமாக பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் சில சக்திகள் மனிதனுக்கு இருப்பதில்லை! காரணம் நாம் அவைகளை பார்த்து எதுவும் கற்றுக்கொள்ள தயாராக இல்லை.. Ego!

    7200 மைல் என்பது விமானங்களுக்கே ஒரு சவால். அனால் மூக்கன் போன்ற சிறிய பறவை நிக்காமல் 7200 மைல் பறப்பது என்பது விந்தையிலும் விந்தை!

    Ram

    ReplyDelete